Saturday, February 7, 2015

வள்ளுவரின் பெண்மையும் இக்காலப் பெண்ணியப் பார்வையும்

Valluvarin penmaiyum ikkala penniya parvaiyum - Tamil Literature Ilakkiyam Papersதிருவள்ளுவர் வாழ்ந்த காலம் ஒரு நிலவுடைமைச் சமூகமாகும். அச்சமூகத்தில் பெண்கள் இல்லத்திற்குரியவர்களாக மட்டுமே இருந்துள்ளனர். ஆண்கள் புற உலகில் செல்வாக்குடன் ஆதிக்கம் பெற்றும் இருந்துள்ளனர். அச்சமூகச் சூழலில் அறம் உரைக்கப் பாடிய திருக்குறளில் அக்காலப் பெண்களின் வாழ்வியல் நிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருக்குறளில் இடம்பெற்றுள்ள பெண்மைக் குணமான கற்பு, ஒழுக்கம், கணவன் மனைவி உறவு, இல்லத்தைப் பேணும் பண்பு முதலானவற்றை இக்காலப் பெண்ணியப் பார்வையில் இங்குக் காணலாம்.
கற்புத்தன்மை
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்
 - - - (குறள் 54)
இல்வாழ்வில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால் அம் மனைவியை விட வேறு செல்வம் கிடையாது.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
 - - - (குறள் 56)
கற்புநெறியில் தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றித் தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண் எனக் கூறப்பட்டுள்ளது. புராதனப் பொதுவுடைமைச் சமூகத்தில் பாலியல் வேறுபாடு இல்லாமல் உறவு வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். நிலவுடைமை வர்க்கம் தோன்றிய பின் சொத்துக்களைத் தம் வாரிசுக்குத்தான் கொடுக்க வேண்டும் என நினைத்து நிலவுடைமையாளர்கள் தம் குழந்தைதான் என்பதை நிரூபிக்கப் பெண்களைக் கற்பு என்னும் கோட்பாட்டில் நிலை நிறுத்தியுள்ளனர். இங்குதான் ஆணாதிக்கச் சமூகம் தோற்றம் பெறுகிறது. அக் கற்புக் கோட்பாட்டை வள்ளுவரும் தம் குறட்பாக்களில் கூறியிருப்பதால், அதை ஓர் ஆணாதிக்கச் சமூகக் கருத்தியலாகவே காண முடிகிறது. அக் கற்புக் கோட்பாடு இன்று மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது. "கற்பு என்ற கருத்தாக்கம் தேவையான ஒன்று என்பதை 95.5% மக்கள் கற்பு என்பது தேவையில்லாத சமுதாயக் கட்டுப்பாடு என்றும் அது மாயை என்றும், வெற்றுப் பந்தம் என்றும் கணித்துள்ளனர்." திருவள்ளுவர் வாழ்ந்த காலம் ஓர் ஆணாதிக்கச் சமூகமாகவே இருந்துள்ளதை அறிய முடிகிறது.
கணவன் - மனைவி உறவு
பண்டைக் காலச் சமூகத்தில் ஆண்கள் மிகுதியாக உழைப்பில் பங்கெடுத்ததால் அவர்களே சமூகத்தில் முதன்மையானவர்களாகக் கருதப்பட்டுள்ளனர். வள்ளுவர் வாழ்ந்த காலக் கட்டத்திலும் அதே நிலை என்பதால் பெண்கள் கணவனின் உழைப்பைச் சார்ந்தே வாழ வேண்டிய சூழல் இருந்துள்ளது. அந்நிலையை வள்ளுவர் தன் படைப்பில் பதிவு செய்துள்ளார்.
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
 - - - (குறள் 58)
பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால் பெருஞ் சிறப்புடைய மேல் உலக வாழ்வைப் பெறுவர் எனக் கூறப்பட்டுள்ளது. கணவனை வணங்கி அவனுக்கு ஏவல் பணி செய்யும் ஓர் அடிமைப் பெண்ணாக வற்புறுத்தப்படுவதைக் காண முடிகிறது.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
 - - - (குறள் 55)
கடவுளை வழிபடாது கணவனைத் தொழும் பெண் பெய் எனக் கூறின் மழை பெய்யும் என்பது கற்பு பற்றிய நடைமுறை விளக்கம். தெய்வத்தை விடக் கணவன் அதீத சக்தி படைத்தவனாகக் காட்டப்பட்டுள்ளான். இது ஆண்களின் சமூக மேன்மையைக் காட்டுகிறது. பெண்கள் கணவனை வணங்கி, ஏவல் பணி செய்வதைத் தவிர சமூகத்தில் பிற பணிகளில் பங்கெடுத்ததாகக் காட்டப்படவில்லை.
இல்லமும் பெண்ணும்
தந்தை வழிச் சமூகத் தோற்றத்திற்குப் பின் பெண்களின் இயக்கத்தை இல்லறத்தில் நிலை நிறுத்தியுள்ளனர். அவர்களுக்கு "இல்லாள்", "மனையாள்", "வீட்டுக்காரி" என்ற இடம் கொடுத்து அவர்களை இல்லத்தில் அடைத்துள்ளனர். வீட்டில் கணவன், பிள்ளை, விருந்தினர் இவர்களிடம் பரிவுடனும், பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என நீதி போதிக்கப்பட்டுள்ளது.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்
 - - - (குறள் 52)
இல்லறத்திற்குத் தேவையான நற்பண்பு பெண்ணிடம் இல்லாவிட்டால் அவள் எவ்வளவு சிறப்புடையவளாக இருந்தாலும் பயனில்லை.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
 - - - (குறள் 53)
மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயனற்றதாகும். "நற்குணம் பொருந்திய மனைவி அமையாவிட்டால் வாழ்க்கை சூன்யமாகிவிடும். இந்தப் பண்பு மற்றும் நற்குணம் என்பது ஆணின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வரையறுத்துள்ளனர்". ஆண்களிடம் பண்பாட்டை எதிர்நோக்கும் சமூகம் அதை வற்புறுத்தவில்லை. ஆனால் பெண்களிடம் பண்பாட்டையும் மரபையும் வற்புறுத்தியுள்ளனர். பெண்களை இல்லத்திற்குரியவர்களாகக் கூறிவிட்டு இல்லச் சுமைகளிலிருந்து ஆண்கள் விலகிக் கொள்கின்றனர்.
பெண்ணை இழிவுபடுத்தல்
பெண்கள் இல்லத்தில் அடைபட்டுக் கிடப்பதால் அவர்களுக்கு வெளியுலக அனுபவம் இருப்பது இல்லை என்றும், ஆதலால் அவர்களிடம் சிந்தனைத் திறன் குறைவாக இருக்கும் என்றும், அவர்களின் பேச்சையோ கருத்தையோ கேட்டு நடப்பது கேடு விளையும் என ஆணாதிக்கச் சமூகத்தினர் கருதியுள்ளனர். அக்கருத்து குறளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
 - - - (குறள் 901)
மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார். கடமையை விரும்பியவர்க்கு வேண்டாத பொருளும் அதுவே எனக் கூறப்பட்டுள்ளது.
தையல் சொல் கேளேல் - - - (ஆத்திசூடி 62)
எதார்த்தத்திலும், இலக்கியங்களிலும் பெண்களுக்குக் கருத்துரிமை கொடுக்காமல் இல்லப் பொம்மையாகவே வைத்துள்ளனர். சமூகத்தில் பெண்களுக்கு எந்தவகையான மேன்மையும் கொடுக்காமல் அடித்தட்டு நிலைக்கே அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
"வள்ளுவப் பேராசானுக்கு அவன் காலத்து நிலப் பிரபுத்துவக் கருத்தான பெண், ஆண் ஏற்றத் தாழ்வுக் கருத்தைத் தாண்ட முடியவில்லை. அதற்கு முதல்தரமான எடுத்துக்காட்டு பெண் வழிச் சேரல் அதிகாரம்" எனப் ப. ஜீவானந்தம் கூறியுள்ளார். "வள்ளுவர் காலத்தில் அரசு தோன்றிவிட்டது. நிலவுடைமை அமைப்பு நிலைத்து விட்டது. வள்ளுவர் அரசுக்கும் நிலவுடைமை அமைப்புக்கும் சேவை செய்பவராகவே விளங்கினார். நிலவுடைமை அமைப்பை உடைக்க அவர் விரும்பவில்லை. அதை நிலைநாடட அரசனுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் அறிவுரை கூறினார். அதை உடைக்க விடாது காப்பதற்கு அறம் வகுத்தார். இவற்றால் நிலவுடைமைச் சமுதாயத்தைப் பேணுவதற்குத் திருக்குறள் இலக்கண நூலாக விளங்குகிறது. நிலவுடைமையை விரும்பியதால் ஆணாதிக்கக் கருத்தியலும் இடம்பெற்றுள்ளது. பெண்ணை இல்லாள் என்று கூறுகின்றனர். ஆனால் இல்லத்தின் நலனுக்கான ஆலோசனை கூறியதாகக் காட்டப்படவில்லை.
நிலவுடைமைச் சமூகத்தில் வாழ்ந்த திருவள்ளுவர் அச்சமூகத்தில் பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட கற்புக்கோட்டைப் பதிவு செய்துள்ளார். நிலவுடைமை வர்க்கத்தினர் அக்கோடபாட்டைச் சுயநலத்திற்காகத் தோற்றுவித்துள்ளனர் என ஆராயப்பட்டுள்ளது. குடும்பத்தில் உழைப்பை ஆண்களுக்குக் கொடுத்து மனைவியைக் கணவனைச் சார்ந்து வாழவைத்து, கணவனையே கடவுளாகவும் வணங்க வைத்துள்ளனர். இல்லத்தில் உள்ள பெண்களுக்கு மரபுகளை வலியுறுத்தி, ஆண்களுக்கு அம் மரபுகள் வலியுறுத்தப் படாமல் உள்ளதைக் குறள்வழிக் காண முடிகிறது. இல்லாள் எனக் கூறப்பட்ட பெண் இல்ல வளர்ச்சிக்கு எந்த ஆலோசனையும் கூறியதாகக் காட்டப்படவில்லை. திருவள்ளுவர் காட்டும் பெண்மை மரபைப் பின்பற்றும் பெண்மையாகவே அமைந்துள்ளது. பெண்ணியப் பார்வையில் இதனை ஆணாதிக்கச் சிந்தனையாகவே அறியமுடிகிறது.
அடிக்குறிப்புகள்
1. முனைவர் பிரேமா - "கற்புக் கலாச்சாரம்," ப. 104.
2. இராயகரன் - "ஆணாதிக்கமும் பெண்ணியமும்," ப. 205.
3. முனைவர் சு. துரை "மார்க்சிய நோக்கு," ப. 84.

இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்

Indrya ilaignarkalukku Thiruvalluvarin vazhviyal nerigal - Tamil Literature Ilakkiyam Papersஇன்றைய இளைஞர்கள்
இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் நெறிகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி காரணமாகச் சமுதாய அமைவுகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து, தனிக் குடும்ப அமைப்பு மேலோங்கி உள்ளது. பழைய மரபுகளும், சிந்தனைகளும் உடைக்கப்பட்டுப் புதிய சித்தாந்தங்களும், புதிய மரபுகளும் படைக்கப்பட்டுள்ளன.
இவ்விதமான சமுதாயச் சூழ்நிலைகளில்தான் இன்றைய இளைஞர்கள் வளர்கின்றனர். வேலை காரணமாக வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் இளைஞர்கள் செல்கின்றனர். பொருள் சம்பாதித்தல் ஒன்றே அவர்கள் வாழ்வின் குறிக்கோளாக மாறி உள்ளது. இதனால் பிற சமூகச் சூழல்களாலும் பாதிப்படைகின்றனர். இவ்விதமான சூழலில் வாழ்கின்ற இருபத்தொன்றாம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளை நினைவூட்ட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.
திருவள்ளுவர் இளைஞர்களுக்குத் தேவையான நெறிகளைச் சுட்டிக்காட்டிச்சென்றுள்ளார். அவர் காட்டும் வாழ்வியல் நெறிகளைக் கீழ்க்காணும் வகையில் நாம் அறிந்து கொள்வோம்.
1. அன்புடைமை
2. பகுத்தறிதல்
3. வாய்மை
4. குற்றங்கடிதல்
5. வினைத் தூய்மை
6. கள்ளுண்ணாமை
7. வெகுளாமை
1. அன்புடைமை
அன்பு என்பது வாழும் உயிர்களுக்குப் பொதுவான ஒன்றாகும். இது இயற்கையான உணர்வுகளில் ஒன்று. அதனால் தான் மனிதப் பிறவி விழுமியது என்று ஆன்றோரால் போற்றப் பெற்றது. அன்பு வழி வாழ்க்கை வேண்டும். அவ்வழியே வளரும் வாழ்க்கை பண்பும் பயனும் உடையதாகும்.
அன்பு உடையவர் பற்றியும், அன்பு இல்லாதவர் பற்றியும் வள்ளுவர் குறிப்பிடும் போது,
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
 - - - (குறள். 72)
என்று கூறுகின்றார். அதாவது அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர் எனவும், அன்பு உடையார் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் எனவும் குறிப்பிடுகிறார். மற்றொரு குறளில் அன்பின் தன்மையை,
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு
 - - - (குறள். 80)
என்று குறிப்பிடுகிறார்.
உடலில் உயிர்நிலை பெறுவது அன்பின் வழிபட்டதேயாகும். ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமே அவ்வன்புதான். அன்பு இல்லாதவருடைய உடம்பு எலும்பும், தோலும் போர்த்தப்பட்ட உடல் ஆகும். எனவே அன்பைப் பேண வேண்டும் என்பது திருவள்ளுவரின் சீரிய சிந்தனையாகும்.
2. பகுத்தறிதல்
அறிவுச்சிந்தனை இன்று பல நிலைகளில் மேம்பாடு அடைந்துள்ளது. பல துறைகளில் நாம் முன்னேறி உள்ளோம். திருவள்ளுவர் இந்த அறிவுச் செல்வத்தைக் கண்டடையும் வழிமுறைகளையும் கூறியுள்ளார்.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
 - - - (குறள். 423)
என்றும்,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
 - - - (குறள். 355)
என்றும்,
சென்ற இடத்தான் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு
 - - - (குறள். 422)
எச்சிந்தனைகளானாலும் அச்சிந்தனைகளின் உண்மைப் பொருளை ஆய்ந்து அறிவதுதான் அறிவு. எனினும் வள்ளுவர் 422 ஆம் குறளில் மனத்தைச் சென்ற இடத்தில் விடாமல் தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் என்று குறிப்பிடுகிறார். கற்றல் மட்டுமே அறிவு அல்ல. நன்மை, தீமைகளையும் அறிவதே அறிவு என்பதைத் திருவள்ளுவரின் சிந்தனையாய்க் கொள்ளலாம்.
3. வாய்மை
"வாய்மை" இன்று மறைந்து போன ஒன்றாகக் காணப்படுகிறது. வாய்மை மனிதனுக்குத் தேவையான பண்பாக இருந்தாலும் கூட அது பல சமயங்களில் பின்பற்றப்படுவதில்லை. வாய்மையின் தன்மையைத் திருவள்ளுவர்,
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
 - - - (குறள். 291)
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
 - - - (குறள். 292)
என்கிறார்.
அதாவது "வாய்மை" என்பது பிறருக்கு எந்தவிதத் தீங்கும் செய்யாத சொற்களைச் சொல்வதுதான். பொய்யான சொற்களால் நன்மை விளையாது; பொய்யான சொற்களும் குற்றம் தீர்ந்த நன்மையை விளைவிக்குமானால் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறுவனவாம் என்று கூறுகிறார்.
இந்நிலையினைத்தான் வள்ளலார்,
உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவோர்
உறவு கலவாமை வேண்டும்
என்று கூறுகின்றார்.
எனவே வாய்மையை மனித வாழ்வினில் கடைப்பிடித்தால் அது பலவிதமான நன்மையை உண்டாக்க வல்லதாகும்.
4. குற்றங்கடிதல்
ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் நின்றாலும், தன் உயர்வைத் தானே வியந்து தற்பெருமை கொள்ளக் கூடாது. அது அறிவுக் கண்ணை மறைக்கக் கூடியது. அவ்வாறு மறைத்தால் உண்மை விளங்காமல் போகும். பல தவறுகள் செய்து அழிவு தேடிக் கொள்ள நேரும்.
செய்த குற்றம் சிறிதே ஆனாலும், அதைப் பெரிய குற்றமாகக் கருதி மனம் வருந்துவது சான்றோர் பண்பு. குற்றம் வராமல் காக்கும் ஆற்றல் வளரும். குற்றம் வராமல் காத்துக் கொண்டால், வாழ்க்கைக்குத் தீங்கு நேராது.
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
 - - - (குறள். 433)
5. வினைத்தூய்மை
செய்கின்ற அல்லது செய்யப் போகின்ற செயல் புகழையும் நன்மையையும் தருமா என்று ஆராய்ந்து செய்ய வேண்டும். எவ்வளவு துன்பப்படுவதாக இருந்தாலும் தெளிந்த அறிவுடையவர்கள் இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்பது வள்ளுவரின் வாக்கு. எனவேதான் அவர்,
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
 - - - (குறள். 656)
என்கிறார்.
அதாவது பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக் கூடாது என்கிறார். எனவே வினைதனை மேற்கொள்வோர் இக்குறளினை நினைவில் கொள்ளுதல் நலம் பயக்கும்.
6. கள்ளுண்ணாமை
இன்றைய காலகட்டத்தில் கள் என்ற போதைப் பொருள் நவநாகரீகமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. வள்ளுவர் கள்ளுண்பவர்களின் நிலையைக் கீழ்க்கண்ட வகைகளில் குறிப்பிடுகின்றார்.
1. மதிப்பை இழந்து விடுவார்கள்.
2. பகைவரும் அஞ்சமாட்டார்கள்.
3. சான்றோரின் உறவும் போய்விடும்.
4. மற்றவர்கள் முன்பு குற்றவாளியாக நிற்க நேரிடும்.
மேலும் அவர்,
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
 - - - (குறள். 923)
என்ற குறளில் பெற்ற தாயின் முன்பாக மகன் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும். அதனால் அந்த மகனைத் தாய் வெறுத்து ஒதுக்குவாள். அப்படியானால் தாயே வெறுத்து ஒதுக்கும்போது மற்ற சான்றோர்கள் அவனை எப்படி சகித்துக் கொள்வார்கள் எனக் கேட்கிறார். ஆகவே கள்ளுண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.
7. வெகுளாமை
வலியார் மேல்சினம் பிறப்பது உண்டு; ஆனால் அப்போது அது பலிக்காது. மெலியார் மேல்சினம் பிறந்தால் அது அவர்களை வருத்தும்.
சினம் பலிக்காத வலியார் இடத்தில் மட்டும் சினம் கொள்ளாமல் காத்துக் கொள்வது போதாது. அங்கே சினம் காப்பதும் காவாமையும் ஒன்றுதான். சினம் பலிக்குமிடத்தில் காத்துக் கொள்வோனே சினம் காப்பவன். இது அருளுடையார் செயல் என்பார் திருவள்ளுவர்.
செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்; அல்விடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?
 - - - (குறள். 301)
செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற
 - - - (குறள். 302)
சினத்தை விடப் பெரிய பகை வேறு இல்லை. படையிடமிருந்து ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொள்ள விரும்பினால் சினம் வராமல் மனத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்; காக்கத் தவறினால் சினம் தன்னையே கொன்றுவிடும். ஆகவேதான் சினம் யாரிடம் உள்ளதோ அவர்களையே அழித்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு. சினங்கொள்ளாமல் வாழ வழி வகுப்போம்.
எனவே இன்றைய இளைஞர்கள் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளைத் தம்முடைய வாழ்வில் பின்பற்றினால் அவர்கள் வாழ்வு மேன்மை அடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!

Tamil tops the series of languages digged-in? - Tamil Literature Ilakkiyam Papersசமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர்.
ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.
அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.
"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.
ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.
ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது
எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.
தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்....
தலை நிமிர்ந்து நிற்போம்.....
"தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..."

தமிழர் வாழ தமிழ் போதுமா..?

Is tamil enough to make a Tamilian live? - Tamil Literature Ilakkiyam Papers
தமிழுக்கு மிகுந்த சோதனைகள் வாய்த்துள்ளதாகத் திரும்பத் திரும்பக் குரல் எழுப்பப்பட்டு வருகிற ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். தமிழுக்கு  அப்படி என்னதான் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்று பார்ப்போம். ஒரு வகையில் பார்த்தால் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தமிழ் பல ஏற்றங்களைக்  கண்டிருக்கிறது. உலகெங்கிலும் சுமார் எட்டு கோடித் தமிழர்கள் இன்று வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழ் பேசத் தெரிந்தவர்கள். பல தலைமுறைகளாக வெளிநாடுகளில் தங்கி அந்நாட்டு மொழியையும் வேறு மொழிகளையும் கற்றுக் கொண்டுவிட்டு, தமிழைப் பயன்படுத்தவே முடியாத சூழலில் தமிழ் பேசாத தமிழர்களும் இருக்கிறார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டாது என்று கொள்ளலாம். இப்படியொரு அதிக அளவில் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் தமிழினம் தொடங்கிய காலம் முதல் இப்போதுதான் இருக்கிறார்கள். உலக மக்கள் தொகை பெருக்கத்தின் நேரடி விளைவாகவும் இதனைப் பார்த்தால் இதற்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் கொள்ளமுடியாது. ஆனால் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையும் இப்பொழுது உள்ள அளவிற்கு இதுநாள்வரை  இருந்ததில்லை என்பதை ஒரு பலமாகவும் பார்க்கலாம். தமிழில் பத்திரிகைகள், புத்தகங்கள் எண்ணற்ற அளவில் ஆண்டுதோறும் பிரசுரமாகின்றன. தமிழ்புத்தகங்களின் மொத்த ஆண்டு விற்பனைத் தொகை ரூ.80 கோடியைத் தாண்டிவிட்டது. எட்டு கோடி தமிழர்களின் புத்தகச் செலவு இதுதான் என்று பார்க்கும் பொழுது இந்த தொகை அவ்வளவு பொருட்படுத்தத்தக்கதாக இல்லை என்று கூறலாம். ஆனால் இவர்களில் ஆறரை கோடித் தமிழகத் தமிழர்கள்தான் புத்தகங்களை அதிகம் வாங்கியவர்கள். அது சுலபமான யூகம்தான். தமிழகத் தமிழர்களிலும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருபது சதவிகிதத்தினருக்கு மேற்பட்டவர்கள். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களில் பலரும் புத்தகம் வாங்கும் பழக்கத்தை இன்னமும் கைக் கொள்ளாதவர்கள் என்றெல்லாம் பார்க்கும் பொழுது புத்தக விற்பனையின் ஏறுமுகம் நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது. நூலகங்கள் தவிர ஒரு சிறுபான்மையினரே புத்தகங்கள் வாங்குகின்றனர் என்றாலும் தமிழ்ப் புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் பெருகி வருவதைக் கண் கூடாகப் பார்க்கலாம். தமிழ் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்துள்ளது. கணினியிலும் தமிழ் காலந்தாழ்த்தாது நுழைந்து விட்டது.
ஆனால் தமிழைக் கல்வி நிலையங்களில் கற்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைஞர்கள் விருப்புடன் தமிழைக் கற்பதில்லை. மேடைகளில், தொலைக்காட்சிகளில் தமிழ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் தமிழ் சொற்களைச் சரியாக உச்சரிப்பதில்லை. ஆங்கிலத்தை விரும்பி உபயோகிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இரண்டு தமிழர்கள் சந்தித்தால் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடவே விரும்புகிறார்கள். தமிழ் மத்தியில் ஆட்சி மொழியாகவில்லை. தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் தமிழ் போதிக்கப்படுவதில்லை. அவ்வாறே போதிக்கப்படும் இடங்களிலும் மேல்நிலை வகுப்புகளில் தமிழ் இடம்பெறுவதில்லை. அங்கெல்லாம் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. குழந்தைகள் அப்பா அம்மா என்றெல்லாம் அழைக்காமல் டாடி, மம்மி என்று அழைக்கின்றனர். சுருங்கக் கூறினால் தமிழின் மிகப் பெரும் அச்சுறுத்தலாக ஆங்கிலம் கருதப்படுகிறது.
தனித்தமிழை வேண்டியவர்கள் வடமொழி மீதுதான் வெறுப்பு கொண்டிருந்தனர். ஆங்கிலத்தின் மீது அல்ல. இப்பொழுது குறைந்த அளவில் மட்டுமே வடமொழி தமிழுக்கு ஊறு விளைவிக்கும் மொழியாகக் கருதப்படுகிறது. வடமொழிச் சொற்களைத் தமிழில் கலக்கக்கூடாது என்பது பலரின் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் பெருமளவில் நிறைவேற்றப்பட்டதாகவே கொள்ளலாம். மணிப்பிரவாள நடை வழக்கொழிந்து போய்விட்டது. வட மொழிச் சொற்களுக்கு மாற்றான தமிழ்ச் சொற்களைப் பலரும் விருப்புடன் எடுத்தாளத் துவங்கிவிட்டனர். வட மொழியினால் தமிழுக்கு அபாயம் எதுவும்  இல்லை. ஏனெனில் தமிழும் வடமொழியும் தனித்தனியேயான உள்ளார்ந்த குணங்கள் கொண்டவை. வடமொழியில் இதிகாசங்களும் வேதங்களும் வளர்ந்தன. தமிழில் இலக்கியங்களும் நீதி நூல்களும் படைக்கப்பட்டன. பக்தி இலக்கியங்கள் தோன்றும்வரை இந்த நடைமுறை இருந்திருக்கிறது. வட மொழி வழக்கொழிந்து போனதற்கும் தமிழ் இன்றளவும் மக்கள் மொழியாக இருப்பதற்கும் இவையும் கூட காரணங்கள்  எனலாம்.
ஆனால் தமிழர்கள் தங்களுக்கு வைத்துள்ள பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேற்றுமைகள் உள்ளன. இந்து சமயத்தைச் சேர்ந்த தமிழர்கள் இந்துக் கடவுள்களின் மற்றும் மகான்களின் பெயர்களைத் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் வைப்பதால் அவை தமிழ்ச் சொற்களாக இருப்பதில்லை. பெரும்பாலும் அவை வடமொழி சார்ந்தவை. ஆனால் அப்பெயர்களை வைப்பவர்கள் சமய இறையுணர்வு காரணமாகச் செயல்படுகிறார்களேயன்றி அவர்கள் தமிழ் உணர்வற்றவர்கள் என்று கொள்வது தவறான கற்பிதம். தமிழர்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் போன்றோரும் தங்கள் இறைவழிபாட்டு பண்பினையொட்டி சமயப் பெயர்களைச் சூட்டுகிறார்கள். அப் பெயர்களும் அந்நிய மொழியிலிருந்து பெறப்பட்டவை. அவற்றுக்கும் மூலம் தமிழ் கிடையாது. கார்ல் மார்க்ஸ், சாக்ரடீஸ், இங்கர்சால் போன்ற அறிஞர்களின் பெயர்களை விரும்பி வைத்துக் கொள்பவர்களும் உள்ளனர். அப்பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல. எனவே இந்துக்கள் மட்டும் தங்கள் இறை நம்பிக்கை அடிப்படையில் அமைந்த பெயர்களை அவை வடமொழி மூலம் கொண்டிருக்கின்றன என்கிற காரணத்தால் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவது எவ்வகையிலும் நியாயமானதல்ல.
அது போன்றே ஷ,ஜ,ஸ ஆகிய எழுத்துகள் வந்தால் அவற்றுக்குப் பதிலாக ச என்ற எழுத்தையும் ஹ வந்தால் அதற்குப் பதிலாக அ என்ற எழுத்தையும் போட்டு எழுதுகிற பழக்கம் தமிழ்ப் பற்றை நிரூபிப்பதாகக் கொள்வது. வடமொழியில் மட்டும் இன்றி இந்த எழுத்துகள் பாரசீகம், அரபு, ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் காணப்படுகின்றன. எனவே பிறமொழிச் சொற்கள் கொண்டுள்ள ஒலியினை வரி வடிவத்தில் தமிழில் தர வேண்டும் என்றால் இந்த எழுத்துகளைக் கட்டாயமாக நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதை மொழி பெயர்ப்பு இலக்கியம் அசட்டை செய்ய இயலாது. ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று எழுதுவதால் என்ன பயன்? இவரல்ல அவர் என்கிற முடிவிற்கு வருவதைத் தவிர? ஒருவரது பெயரையே ஒப்புக்கொள்ளாதவர்கள் அவருடைய படைப்புக்கு எத்தகைய நியாயத்தை வழங்கி விட முடியும்? நம் மொழிக்குப் பிறர் இத்தகைய சிதைவுகளைச் செய்தால் நாம் மனம் ஒப்புவோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆங்கிலேயர்கள் நம் ஊர் பெயர்களைச் சிதைத்ததை நாம் மீட்டெடுக்க முயற்சிக்கிறோம். தனித்துவம் மிக்க ழ என்கிற தமிழ் எழுத்து ஆங்கிலத்தில் LA என்று எழுதப்படுவதைவிட zha என்று அதன் உச்சரிப்பு கெடாமல் வரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதே ஆற்றலை நாம் மற்ற மொழிகளுக்கும் தர வேண்டுமல்லவா? வடமொழி உள்ளிட்டு எந்த மொழி மீதும் வெறுப்பினை வளர்த்துக் கொள்ளக் கூடாது. மொழிகள் பரஸ்பரம் கொள்கிற பாதிப்புகள் நாகரிகத்தின் அடையாளம். "பிற மொழிகள் மீது பகைமை கொள்ளாதே பாப்பா" என்கிற வரியையும் பாப்பா பாட்டில் சேர்த்துப் படிக்க வேண்டும்.
ஆங்கிலத்தைப் பொறுத்தவரை அதன் மீதான எதிர்கொளல் சிந்தித்துச் செயல்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. ஆங்கிலத்தை விரும்பிக் கற்பவர்களாயும் அதைப் பயன்படுத்துபவர்களாயும் உள்ள தமிழர்களை ஆங்கில மோகிகள் என்று வர்ணிப்பது பிழை. மோகம் என்பது பயனற்ற அர்த்தமற்ற விளைவுக்கு இட்டுச் செல்கிற மனோபாவத்தைக் குறிக்கும். தேர்ச்சி பெறுவதென்பது காலத்தின் இன்றியமையாமை ஆகும். ஆங்கிலத்தில் இரண்டு தமிழர்கள் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் உரையாடுவது தவறு என்று பேசப்பட்டு வருகிற காலம் இது. ஆங்கிலத்தில் உரையாடினால் தமிழ் மெல்லச் சாகும் என்று சொல்லுமளவுக்குத் தமிழ் பலவீனமான மொழி அல்ல. தமிழர்களும் தமிழைத் தவிக்க விடுவதற்காக ஆங்கிலம் பேசுவதில்லை. தேவை கருதியும் தன்னம்பிக்கையின் அடையாளமுமாயும்தான் அவர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்கள் முழுதும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பதில்லை என்பதையும், அது இயலாத ஒன்று என்பதையும் கூட கவனிக்க வேண்டும். இன்று தமிழர்களின் சமூக, பொருளாதார நிலை உயர்ந்திருக்கிறதென்றால் அதற்கு மிக முக்கிய காரணம் ஆங்கிலக் கல்வி. தமிழர்களின் வாழ்வில் வளம் சேர்ப்பது ஆங்கிலம்தான். தமிழர்களாகிய நாம் நம்மிடையே உள்ள பிற வளங்கள் என்ன என்பதைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும். நம்மிடம் இயற்கை வளங்கள் குறைவு. வற்றாத நதிகள் என்று எதுவும் இல்லை. குடிநீருக்கே பிற மாநிலங்களை யாசிக்க வேண்டிய நிலை. ஏற்றுமதி செய்யத்தக்க கனிமப் பொருட்களோ நுகர் பொருட்களோ கணிசமான அளவில் இங்கு கிடையாது. 
நாடு என்ப நாடாவளத்தன நாடல்ல / நாட வளம் தரும்நாடு என்றார் வள்ளுவர். நமக்கே இயற்கையாக வாய்க்கப்பெற்ற வளம்தான் நம்முடையது என்னும் பட்சத்தில் நம்மிடம் இருப்பதெல்லாம் மனித வளம்தான். நாம் மற்றவரிடமிருந்து எதையாவது பெறவேண்டுமென்றால் நாம் எதையாவது அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா? நம்மால் கொடுக்க முடிவது மனித வளத்தைத்தான். காலம் காலமாகத் தமிழர்களாகிய நாம் நம் உழைப்பைத்தான் மற்றவர்களுக்குக் கொடுத்து வந்திருக்கிறோம். பிஜி, ஆப்ரிக்கா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்குக் கூலி வேலை செய்பவர்களைத் தருபவர்களாக தமிழகம் இருந்திருக்கிறது. ஆனால் இன்று அந்த அவல நிலை மாறி பிற நாடுகளுக்கு நாம் அறிவு சார்ந்த துறைகளில் வேலை செய்வதற்காக தமிழர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் ஆங்கில அறிவுதான். ஆங்கிலத்தில் நம்மவர்கள் பேசவும் எழுதவும் பெற்ற தேர்ச்சியின் விளைவே இது.
இந்தத் தேர்ச்சியை நாம் எவ்வாறு பெற்றோம்? 
பல வருடங்களாக ஆங்கிலம் கற்றுப் பேசி எழுதிப் பெற்ற தேர்ச்சி இது. எனவே ஆங்கிலத்தில் பேச தேர்ச்சி பெற வேண்டுமென்றால் தமிழர்கள் பிற தமிழர்களிடம்தான் பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்களிடம் மட்டுமே ஆங்கிலம் பேச வேண்டுமென்றால் இந்தத் தேர்ச்சி வந்திருக்காது. சிறு வயது முதல் ஆங்கிலம் படித்தாலும் ஆங்கிலமே பேசியிராதவர்கள்  இருபது வயதுக்கு மேல் வேலை நிமித்தமாக திடீரென சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடியுமா? மொழிப் பயிற்சி சிறு வயதிலிருந்தே வருவது நல்லது.
நான் மம்மி என்று கூப்பிடுகிறேன். அதனால் நீ கவுன் அணிந்து முள் கரண்டியால் எனக்கு ரொட்டியை ஊட்டு என்றெல்லாமா அக்குழந்தை தன் தாயிடம் கேட்கிறது? தமிழ் உணர்வுடன் பண்பாட்டுடன்தான் அக்குழந்தை பேசுகிறது. மம்மி என்பது அக்குழந்தையின் ஆங்கில மழலை. நீ எனக்கு அம்மா என்ற சொல்லைக் கற்றுக் கொடுத்தாய், நான் மம்மி என்ற சொல்லைக் கற்று வந்திருக்கிறேன் பார் என்று அது பெருமிதத்துடன் சொல்வதைத் தமிழுக்கு எதிரான செயலாகப் படம் பிடித்துக் காட்டுவதும் ஆங்கிலத்தை விட்டுத் தமிழில் பேசுகிற குழந்தைகளுக்கு அபராதம் போடுகிற ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளி ஆசிரியர்களின் கொடூரமும் மொழி பற்றிய புரிதலின்மை என்கிற ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும். மம்மி, டாடி என்பதெல்லாம் சரி, நீ அம்மா அப்பா என்றுதான் கூப்பிட வேண்டும் என்று அன்பாகக் கூறினால் அக்குழந்தை ஒரே நொடியில் தன்னை மாற்றிக் கொள்ளும். 
ஆங்கிலம் தமிழ்ச் சமூகம் வளர்ந்துள்ளது. ஆங்கிலம் போன்ற ஒரு மொழியின் வளத்தையும் உபயோகத்தையும் அம்மொழி தரும் வாய்ப்புகளையும் தமிழ் தரவேண்டுமென விரும்பும் நாம் ஆங்கிலத்தை ஒதுக்கி வைப்பது கூடாது. இந்தியாவின் எதிர்காலத்தை தொலைநோக்குடன் பார்த்த காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் போன்றோர் நம்மை அடிமைப்படுத்தியவன் ஆங்கிலேயன் என்ற ஒரு காரணத்திற்காக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்ளுமாறு போதிக்கவில்லை. தலித் மக்களுக்கு ஆங்கிலக் கல்வி அவர்களது பின்தங்கிய நிலைகளிலிருந்து விடுதலையை அளிக்கும் என்று நம்பினார் அம்பேத்கர்.
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான பாரதிக்கு மட்டும் ஏனோ அச்சிறப்பு மிக்க கண்ணோட்டம் வாய்க்கவில்லை. ஆங்கிலக் கல்வியையும் ஏன், தன்னிடம் ஆங்கிலம் பேச வந்த தமிழர்களையும் சினந்தார் பாரதி. ஆங்கிலத் தேர்ச்சி மற்றும் பெற்றிராவிடில் பாரதி நவயுகத்தின் மகாகவியாக ஆகியிருக்க முடியாது என்பது நிச்சயம். ஷெல்லி, வால்ட் விட்மன் ஆகியோரின் நேரிடையான பாதிப்புகளுக்கு மட்டுமின்றி அவரது கவிதைகளில் இடம்பெற்ற முன்னோடியான சிந்தனைகளுக்கும் அவரது ஆங்கில அறிவே காரணம். கவிஞராக மட்டுமல்ல, ஒரு பத்திரிகையாளராக பாரதி ஆங்கில அறிவினால் அடைந்த பயன்களும் ஏராளம். ஆனால் பாரதி உட்பட அனைத்துத் தமிழர்களும் புத்திசாலிகள். அவர்கள் ஒருபோதும் மெய்யாக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்வதில்லை. தலைவன் முதல் தொண்டன்வரை ஆங்கிலத்திற்கு எதிராகப் பொது வெளிகளில் பேசுகிற அனைவரும் ஆங்கிலம் மீது விருப்பு கொண்டவர்கள். தங்கள் பிள்ளைகள் நன்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதில் உறுதியானவர்கள். ஒரு பக்கம் வாழ்க்கை வெற்றிக்குத் தேவையான ஆங்கில அறிவை அடையும் முயற்சி. இன்னொரு பக்கம் தமிழ் பின்தங்கிவிடக்கூடாது என்று எண்ணிச் செயல்படுகிற தவிப்பு. இவைதான் தமிழனின் இன்றைய நிலை.
தமிழ் அசாதாரணமானதும் அற்புதமானதுமான ஒரு மொழி என்பதில் சந்தேகம் இல்லை. இத்தனை ஆயிரம் வருடங்களாக அது எத்தனையோ இடர்களைக் கடந்து இன்றும் இளமையுடன் தோன்றுகிறது. உலக ஓட்டத்துடன் தமிழ்  தன்னைச் சளைக்காமல் இணைத்துக் கொள்கிறது. எந்த மொழியில் புதிய சொல்லாக்கங்கள் ஏற்பட்டாலும் அதற்குத் தமிழில் தக்க ஒரு சொல்லை உருவாக்கிவிட முடிகிறது. ஆனால் இதனால் நாம் எதையோ இழக்கிறோமோ என்றும் தோன்றுகிறது. ஆங்கில வழியில் வரும் சொற்கள் தான் தமிழில் மிகுதியாக இவ்வாறு மறு ஆக்கம் செய்யப்படுகின்றன. ஆங்கிலப் பதங்களுக்கு தமிழ்ச் சொற்களை உருவாக்குவது என்றில்லாமல் சுயமாக ஒரு கருத்துக்குத் தமிழில் சொல்லாக்கம் செய்வது என்பது அரிதாக உள்ளது. அவ்வாறு சமீபத்தில் வெற்றிகரமாகப் பெறப்பட்ட ஒரு சொல் திருநங்கை. நேரிடையாக பல ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. குதிரை பேரம், பங்குச் சந்தை வார்த்தைகளான கரடி, காளை, தொங்கு பாராளுமன்றம், ஓடு தடம், மென்பொருள், அலை வரிசை, கறுப்பு ஆடு, நீர்வீழ்ச்சி, தொலைக்காட்சி இப்படி ஏராளமான சொற்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை நேரிடையாக இல்லாமல் பொருளை உள்வாங்கி உருவாக்கப்படும் சொற்களும் உள்ளன. நகை, முரண், புகைப்படம், பேருந்து, காசோலை, கணினி, வானொலி போன்ற பல சொற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
அவ்வாறு இருவகையிலும் உருவாக்கப்பட்ட சொற்கள் கலைச் சொற்கள் போன்றவை. தமிழ் எழுத்து நடையில் இத்தகைய சொற்கள் நாளும் பெருகி வருவதைப் பார்க்க  முடிகிறது. இன்னும் சில  ஆண்டுகளில் இத்தகைய சொற்களின் வரத்து அதிகமாகி எழுத்து தமிழ் உருவாக்கப்பட்ட சொற்களின் கோவையாக விளங்கக்கூடும். பேச்சுத் தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் மேலும் இடைவெளி இதனால் அதிகமாகும் என்பதோடு மட்டுமின்றி, இது நாள் வரை தமிழ் மொழி என்பது வாழ்விலிருந்து பெறப்பட்டது என்கிற வழக்கிலிருந்தும் மாறுபட்டதாகி தமிழுக்கு செயற்கைத் தன்மை வந்து சேரும். இது தமிழ் மட்டுமின்றி பிற இந்திய மொழிகளுக்கும்கூட பொருந்தும்.
இதற்கெல்லாம் காரணம் தமிழர்களாகிய நாம் உலகை ஆள்வதில் பங்கேற்பதில்லை என்பதுதான். பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் முன்னோடி அங்கம் ஏற்பதில்லை என்பதில் மட்டுமல்ல, அறிவு சார்ந்த இயக்கங்களையும் நாம் உருவாக்குவதில்லை. தமிழில் இலக்கியம் தவிர புதிதாக எதுவும் படைக்கப்படுவதில்லை. கண்டுபிடிப்புகள், கருத்தாக்கங்கள் அனைத்தும் நமக்கு மேற்கிலிருந்து வருகின்றன. நாம் அவற்றை நம் மொழியில் செவ்வனே பொருத்திக் கொள்கிறோம். அதற்கேற்ப மாற்றுச் சொற்களை உருவாக்கிக் கொள்கிறோம். சுயமாக கண்டுபிடிப்புகளும் கருத்தாக்கங்களும் தமிழர்களால் செய்யப்பட்டு அவை தமிழில் பதிக்கப்படும் வரை இந்த வறுமை நீடிக்கும். அதுவரை கோடிக்கணக்கானவர்களின் அன்றாட மொழியாகத் தொடர்ந்தாலும் தமிழ், மொழி சார்ந்த பெருமையில்தான் திளைக்க வேண்டியிருக்கும். நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானிகளான சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் ஆய்வுகளைத் தமிழிலும் எழுதி வெளியிட்டிருந்தார்களேயானால் இந்த நிலைமை மாறியிருக்கும். இனிவரும் காலங்களில் பல்துறை சார்ந்த தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிற அதே சமயத்தில் சற்றும் காலம் தாழ்த்தாது தமிழிலும் வெளியிட்டால் அது ஒரு முன் மாதிரியான முயற்சியாகத் தமிழை உலகத்திற்கு எடுத்துச் செல்கிற செயலாக இருக்கும். இவ்வாறு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை, விருது என்றெல்லாம் எதுவும் தரப்பட வேண்டியதில்லை. இயல்பான தமிழ் உணர்வு எல்லா தமிழர்களிடமும் செயல்பட வேண்டும். 
தமிழை மற்ற மொழிகளுடன் குறிப்பாக, ஆங்கிலத்துடன் போட்டியிடும் மொழியாகப் பாவிப்பதனால் தான் பல பிரச்சினைகள் எழுகின்றன. வேலை வாய்ப்புக்கும் வெளி உலகத் தொடர்புக்கும் தமிழ்  உபயோகமாக இருக்குமா என்ற கோணத்தில் தமிழைப் பார்க்கக்கூடாது. அவ்வாறு தமிழ் இல்லாத பட்சத்திலும் தமிழ் நம் மொழி, அதை நன்கு கற்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும். தமிழ்நாட்டிற்குள் மட்டும் செயல்படுகிற நீதிமன்றங்கள், அரசு நிர்வாகங்கள் ஆகியன தமிழில் இருக்க வேண்டும்.
வருங்கால சந்ததியினருக்கு தமிழின்பால் தன்னார்வத்தை தூண்டுமாறு இன்றைய தலைமுறையினர் செய்யவேண்டும். தமிழ் படிக்க வரும் மாணவர்களை வேதனைப்படுத்தக்கூடாது. கடினமான தமிழைப் படிப்பதைவிட பிரெஞ்சு, வடமொழி ஆகியவற்றைப் படித்தால் சுலபமாக மார்க் வாங்கிவிடலாம் என்ற யதார்த்தத்தை மாற்றும் வகையில் தமிழ் படிப்பும் சுலபமாக இருக்க வேண்டும். தமிழை வைத்து தமிழ் மாணவர்களையே மிரட்டினால் பின்னர் அதைப் படிக்க வேறுயார் வருவார்கள்? பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இன்று இருப்பது போல் வெறும் இலக்கிய, இலக்கணப் படிப்பாக மட்டும் தமிழ் இருக்கக் கூடாது.
தமிழ் அதிகாரப்பூர்வ செம்மொழியாகி விட்டபடியால் உலகெங்கிலுமுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதை அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்றில்லாது வசதி படைத்த தனியார்களும் செய்ய விரைந்து முன்வரலாம். தமிழைப் பரப்புவது என்பது தமிழைத் தமிழர்களின் எல்லைக்கு அப்பால் கொண்டு செல்வதாகும். தமிழைத் தமிழர் மட்டுமே படிப்பது, எழுதுவது என்றில்லாது தமிழைத் தமிழ் அல்லாதோரும் அறிந்து கொள்ளுமாறு செய்யவேண்டும். அதுவே தமிழருக்கும் தமிழுக்கும் பெருமை!.
 

ராசராச சோழனின் கோயில் பெருமிதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஜாதி!

The rational creed and caste behind Raja Raja Chozhan's fame - Tamil Literature Ilakkiyam Papers
மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, தமிழக அரசு கோவையில் நடத்திய "உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு" ஆரவாரங்கள் இன்னும் அடங்கவில்லை. ஆனால், விழா நடத்திக் களிப்பதில் வித்தகரான இன்றைய முதல்வர், தற்பொழுது தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாண்டு நிறைவு விழாவை (செப்டம்பர் 22 அன்று தொடங்கி 26 வரை) அமர்க்களமாய்க் கொண்டாடி இருக்கிறார். தாங்க முடியாத பொருளாதார நெருக்கடிகள், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், சாதி சண்டைகள், சமயப் பூசல்கள் போன்ற பல்வேறு சுமைகளின் பாரம் தாங்காமல் - தமிழனின் முதுகெலும்பே முறிந்து போகும் நிலையில் இவையெல்லாம் எதற்காக? வீழ்ந்து கிடக்கும் தமிழினம், மாமன்னன் ராசராசனின் வெற்றிப் பெருமிதங்களின் நினைவூட்டலால் தலைநிமிரும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்விழா நடத்தப்பட்டதா?
ராசராசனின் பெயரை விண்ணளவு உயர்த்திக் காட்டும் கலைப்பெட்டகமாய் இன்றளவும் உயர்ந்து நிற்பது தஞ்சைப் பெரிய கோயில். ராசராசனின் ஆட்சிக் காலம் பற்றிய செய்திகளில் பலருக்கும் பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைத் திறனுக்கு சான்றாய் தனிச் சிறப்போடு நிற்கிறது தஞ்சைப் பெரிய கோயில். கி.பி. 1009இல் இவன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இக்கோயில் கோபுரத்தின் உயரம் 216 அடி. அக்கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள கல் 80 டன் எடை கொண்டதாகும். 25.5 அடி சதுரம் உடைய அந்த ஒற்றைக் கல்லை கோபுரத்தின் உச்சிக்குக் கொண்டு செல்ல 10 கி.மீ. தொலைவுக்கு சாரங் கட்டித்தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இன்றைக்கும் தஞ்சை அருகே "சாரப்பள்ளம்" என்கிற ஊர் உள்ளது. இரும்பும், சிமெண்டும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அகிலமே வியக்கின்ற இந்த அருஞ்செயலைச் செய்து முடித்த நம் தமிழ் முன்னோர்களின் ஆற்றல்சால் கட்டடக் கலைத்திறன் போற்றுதற்கு உரியதே!
ஆனால், இவ்வளவு பெரிய அறிவு நுட்பமும் கலைத் திறனும் கொண்ட அந்தக் கால உழைப்புச் சமூகத்தின் உள்ளார்ந்த வாழ்நிலை என்ன? வான் முட்ட எழுந்து நிற்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கடைக்காலில் புதைந்து கிடக்கும் உழைக்கும் மக்களின் கண்­ணீரும் செந்நீரும் - இந்த ஆயிரமாம் ஆண்டு விழா ஆர்ப்பாட்டப் பேரிரைச்சலில் நம்மால் அடையாளம் காணப்படுமா?
சாதிப் பிரிவுகள் அற்றுச் சமத்துவ வாழ்வு வாழ்ந்த தொல் தமிழ்க் குடியில், தொல்காப்பியர் காலத்திலேயே பிளவுகள் தொடங்கி விட்டன. அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என்கிற நால்வகைப் பிரிவும் செய்யுந் தொழிலின் அடிப்படையில்தான் முதலில் அமைந்தது. பின்னர் அதுவே சாதியச் சழக்காய் நிலைத்து விட்டது என்று சமூக ஆய்வாளர்கள் சிலர் எழுதுகின்றனர். ஆனால், தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலேயே பார்ப்பனரின் முதுகில் பூணூல் மாட்டப்பட்டு விடுகிறது.
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய
- தொல். பொருள். மரபியல் 66
முப்புரி நூல் (பூணூல்), தண்ணீ­ர் சொம்பு, முக்கோல், அமர்வதற்கான இருக்கை ஆகிய அந்தணர்க்குரியன என்பது இதன் பொருள்.
ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன
- தொல். பொருள். அகத்திணையியல் 28
என்கிற நூற்பா, "ஓதுதல்" ஆகிய "கல்வி" என்பது, உயர்ந்தோரான அந்தணர்க்குதான் உரியது என்று சொல்லப்பட்டுவிட்டது.
இதன் தொடர்சியானது, பின் நாட்களில் பாறைபோல் கெட்டிப்பட்டுப் பிற்கால சோழப் பேரரசில் அசைத்துப் பார்க்கவே முடியாத பார்ப்பன மநுதரும ஆட்சியாகவே நிலைத்துவிட்டது. ராசராசன் காலத்தில் ஆயிரக்கணக்கான அயல்நாட்டுப் பார்ப்பனர்கள் அலையலையாக இங்கே இறக்குமதி செய்யப்பட்டனர். தமிழ் நாட்டுக் கோயில்கள், கல்வி நிறுவனங்கள், மடங்கள் ஆகியவற்றில் அந்தப் பார்ப்பனர்கள் - அர்ச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயணம் செய்வோராகவும் அமர்த்தப்பட்டனர்.
வேத நெறியைத் தழைத்தோங்கச் செய்ய, சோழ மன்னர்கள் பார்ப்பனர்களுக்குப் பொன்னையும் பொருளையும் வாரிவாரி வழங்கினார்கள். அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் தனி நிலங்களும், முழு முழுக் கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அவ்வாறு அரசர்களால் வழங்கப்பட்ட பார்ப்பனக் கிராமங்கள் - அக்கிரகாரம், அகரம், சதுர்வேதிமங்கலம், பிரமதேயம் என்கிற பெயர்களில் செல்வச் செழிப்போடு விளங்கின. அந்தக் கிராமங்களில் அரசனின் ஆணைகள்கூட செல்லுபடி ஆகா. எவ்வகையான வரிகள், கட்டணங்கள், கடமைகள் ஆகியவற்றிலிருந்தும் அவற்றுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டன.
ராசராச சோழன், அவன் மகன் ராசேந்திர சோழன், குலோத்துங்க சோழன் என நீளும் பிற்காலச் சோழர் ஆட்சியில், உழைக்கும் மக்களை கசக்கிப் பிழிந்து மிகக் கொடிய முறையில் பல்வேறு வகையான வரிகள் வசூலிக்கப்பட்டன. அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தில் இருந்துதான் விண்முட்ட ஆலயங்கள் எழுப்பப்பட்டன. மநுதர்ம விதிகள் சட்டமாக்கப்பட்டன. பார்ப்பனர்கள் கேட்டவை கேட்டபடி அளிக்கப்பட்டன.
சோழர் கால ஆட்சிச் சிறப்புகள் பலவற்றுள் ஒன்றாகச் சொல்லப்படுவது அவர்கள் நாடு, கூற்றம் என தம் ஆட்சிப் பரப்பைப் பல உட்கூறுகளாகப் பிரித்து ஆண்டார்கள் என்பதாகும். நிலங்களை அளந்து நாட்டைப் பகுத்தமையும், ஊர்ச்சபைகள் அமைத்துக் குடிமக்கள் நலன் காத்தமையும் சிறப்பாகப் பேசப்படுகிறது. சோழர் காலத்துக் குடவோலை முறை, பள்ளிப் பாடநூல்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு செய்தியாகும். இதுபற்றி உத்தரமேரூர்க் கல்வெட்டுகளில் பின் காணப்படுவன:
"உத்தரமேரூர் கிராமம் முப்பது தொகுதிகள் அல்லது குடும்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இக்குடும்புகள் ஒவ்வொன்றும் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கான தகுதியுடையவர் ஒருவரை நியமனம் செய்தல் வேண்டும். அவ்வாறு குடும்புகளால் நியமனம் பெறுவோர் அனைவரும் கூடிக் குடும்புக்கு ஒருவராக மொத்தம் முப்பதின்மர் குடவோலை முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஓலை நறுக்குகளில் பெயர்கள் எழுதப்படும். அவை ஒரு குடத்தில் இடப்பட்டுக் குலுக்கப்படும். பின் சபைக்குத் தேவைப்படும் உறுப்பினர்களை, ஒரு சிறுவனை ஏவி கைவிட்டு எடுக்கச் செய்வர்". இந்த முறையில் அமைந்த குடிநாயக மாண்பைப் பெருமையாகப் பேசுவோர் ஒன்றை மறைத்து விடுகின்றனர்.
கிராம நிர்வாகத்தில் முதன்மைப் பாங்காற்றும் அந்த முப்பது உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டிய தகுதிகளாக, உத்தரமேரூர்க் கல்வெட்டுகள் உரைப்பன யாவை?
அவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்த அளவு கால்வேலி நிலமாவது இருக்க வேண்டும். சொந்தமாய் வீட்டுமனை இருக்க வேண்டும். 35 வயதிற்குக் குறையாமலும் 70 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டிய அவர்களுக்குரிய மிகமிக முதன்மையான தகுதி, அவர்கள் வேதத்துடன் தொடர்பு கொண்ட மந்திர பிராமணங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேதத்தை ஓதும் திறனைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்காணும் ஊர் உறுப்பினர்களின் தகுதிகளில் இருந்து சோழர் கால கிராம ஆட்சி என்பது யாரால், யாருடைய நலனுக்காக நடைபெற்றுள்ளது என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. அதுமட்டுமல்ல, சோழர் கால மெய்கீர்த்திகள் அனைத்திலும் அம்மன்னர்கள் சாதி ஒழுக்கத்தை நிலைநாட்டுவதையே தம் சீரிய அரச கடமையாகக் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. ஆரிய ஒழுக்கங்களைப் பாராட்டும் சாத்திரங்களும் புராணங்களுமே நாடு முழுவதும் கற்பிக்கப்பட்டடுள்ளன. அரசர்கள் அமைத்த கல்வி நிறுவனங்களில் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பயிற்றுவிக்கப்படவில்லை. மாறாக, இதிகாசங்கள், சிவதருமம், ராமநுசபாடியம், மீமாமிசை, வியாகரணம் போன்ற வடமொழி இலக்கிய இலக்கணங்கள் சொல்லித் தரப்பட்டுள்ளன.
சோழர் ஆட்சிக் காலத்தில் பொதுமக்கள் பிழை இல்லாமல் தமிழை எழுதவோ, படிக்கவோ தெரியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான சோழர் காலத்துக் கல்வெட்டுகள், எழுத்துப் பிழைகள் மலிந்தனவாய்க் காணப்படுகின்றன. இவற்றைக் கொண்டு பார்த்தால், அந்தக் கல்வெட்டுகளை செதுக்கிய கல்தச்சர்கள் குறைந்த எழுத்தறிவு கொண்டவர்களாய் இருந்திருக்க வேண்டும். இதில் வேடிக்கை என்னவெனில், செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார், கம்பர், புகழேந்தி போன்ற பெரும்பெரும் தமிழ்ப் புலவர்கள் - பல்லவர் மற்றும் சோழர் ஆட்சிக் காலங்களில் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சோழர் காலத்தில் எழுதப்பட்ட சைவ, வைணவ இலக்கியங்கள் பலவும் வடமொழிக் கலப்பை மிகுதியாகக் கொண்டிருந்தன.
தமிழினத்திற்கே பெரும் தலைக்குனிவாய் உள்ள சாதி வேற்றுமைகள் பல்கிப் பெருகி வேர்விட்டது சோழர்கால ஆட்சியில்தான் என்பது, வரலாறு பதிவு செய்து வைத்துள்ள மாபெரும் உண்மையாகும். வேளாளர், பிள்ளைமார் முதலியோரும், செட்டிமார்களும் மற்றவர்களைவிட தாம் உயர்ந்தோர் என்றும், பார்ப்பனர்க்கு அடுத்த நிலையுடையவர்கள் தாம் தாம் என்றும் தருக்கி வாழ்ந்தது, சோழர் கால ஆட்சியில் கெட்டிப்பட்டுப்போன பெருங்கேடாகும்.
வரலாற்றில் மாறாத வடுவாக நிலைத்துவிட்ட வலங்கை இடங்கைக் குலங்களின் குருதி சிந்திய போராட்டங்கள் பற்றி கே.கே.பிள்ளை அவர்கள் தமது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"சோழர் காலத்தில் ஓங்கி வளர்ந்த குல வேறுபாடுகள், மிகவும் தீய விளைவுகளுக்கு களனாக இருந்தது வலங்கை - இடங்கை என்னும் பிளவாகும். இவ்விரு பிரிவினருக்கும் இடையே பல கடும் பூசல்கள் நேரிட்டுள்ளன. இப்பூசல்கள், சோழப் பேரரசின் காலத்திற்கு முன்னே தோன்றி, விசயநகரத்துப் பேரரசர்கள் காலத்தில் தொடர்ந்து வளர்ந்து வந்து - ஆங்கிலேயர் அரசாட்சியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் நடைபெற்று வந்தன. சென்ற நூற்றாண்டில் இப்பூசல்களின் காரணமாக சென்னையின் தெருக்களில் மனித ரத்தம் சிந்தியதுண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலங்கை - இடங்கை வேறுபாடுகள் திடீரென்று மறைந்துவிட்டன. இப்போது மக்களுக்கு அப்பெயர்களின் பொருளே இன்னதென விளங்குவதில்லை. இந்த வேறுபாட்டை வரலாற்று நூல்களின் பக்கங்களில்தாம் விளங்கக் காண்கின்றனர். ஒன்பது நூற்றாண்டுகளாகத் தமிழரின் வாழ்க்கையை அலைக்கழித்து வந்த சமூகக் கேடு ஒன்றன் தோற்றமும் முடிவும் வரலாற்று விளக்கங்காணாத மறைபொருள்களாகவே உள்ளன". ("தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்" - பக். 321)
சோழர் ஆட்சிக் காலத்தில் பெண்களின் நிலை மிகவும் இரங்கத்தக்கதாய் இருந்தது. இரு கண்கள் எனப் போற்றப்பட வேண்டிய பெண்கள் பலரையும் கோயில்களில் தேவரடியார்கள் ஆக்கிய பீடு மிக்கப் பெரும் பணியைச் செய்தவன் மாமன்னன் ராசராசன் ஆவான். இன்று ஆயிரமாம் ஆண்டு காணும் இதே தஞ்சைப் பெருவுடையார்க் கோயில் திருத் தொண்டுக்காக, ராசராசன் நானூறு தேவரடியார்களை அமர்த்தினான். அவர்களுக்குத் தனித்தனியே வரிசையாக வீடுகள் அமைத்துக் கொடுத்தான் என்று தஞ்சைக் கோயில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. சோழர் காலத்தில், பெண்கள் உடன்கட்டை ஏறும் கொடுமையும் நடந்துள்ளது என்பதற்குப் பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழர் பண்பாடு என்று பெருமை பேசப்படுகிறது. ராசராச சோழனுக்கு உலோகமாதேவி, சோழமாததேவி, திரைலோக்கியமாதேவி, பஞ்சவன்மாதேவி, அபிமான வல்லி, லாடமாதேவி, பிருதிவிமாதேவி, மீனவன்மாதேவி, வீரநாராயணி, வல்லவன்மாதேவி, வனவன்மாதேவி எனப் பன்னிரெண்டு மனைவியர் இருந்தனர் என, வே.ஆனைமுத்து தாம் எழுதிய "தமிழ் நாட்டில் பண்பாட்டுப் புரட்சி" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை சார்ந்த நேரிய வாழ்வும், நெடிய வரலாறும், நிறைந்த இலக்கியச் செல்வங்களும் பெற்ற ஒப்பற்ற இனமாகத் தமிழர் வாழ்ந்தனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால், உண்மையான இயங்கியல் கண்ணோட்டத்தில் தமிழர் வரலாற்றை அணுகுவதும், மீள் ஆய்வு செய்வதும் மிகமிக இன்றியமையாததாகும். தமிழர் வீழ்ச்சிக்குப் பெருங்காரணமாய் அமைந்த வர்ணாசிரம ஆதிக்கம், சாதியக் கொடுமைகள், பெண்ணடிமைத் தனம், உழைக்கும் மக்களுக்கு எதிரான கொடிய சுரண்டல் போன்ற அழிக்க முடியாத வரலாற்றுக் கறைகளைப் பிற்காலச் சோழர் ஆட்சி, மிகமிக அழுத்தமாகவே பதிவு செய்துள்ளது. சாதி, மத ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமத்துவப் பொதுமைச் சமூகத்தை தமிழ் மண்ணில் அமைத்திட முயலும் யார்க்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாம் ஆண்டு நிறைவு விழா, எந்த வகையிலும் நிறைவைத் தராது என்பது உறுதி!
சோழர் காலத்தில் உழைக்கும் மக்களிடமிருந்து கட்டாயமாக பெறப்பட்ட வரிகள்
மீன்பாட்டம்: மீன்பிடி தொழிலுக்கு மீனவர் செலுத்திய வரி
வட்டி நாழி: கழனிக்குத் தண்ணீ­ர் பாய்ச்சிய நாழிகையைக் கணக்கிட்டு அதன்படி உழவர்கள் செலுத்திய தண்­ர் வரி
கண்ணாலக் காணம்: திருமணம் செய்து கொண்டால் செலுத்தப்பட்ட வரி
வண்ணாரப்பாறை: துணி வெளுப்பவர்கள் செலுத்திய வரி
குசக்காணம்: குயவர்கள் (மண்பாண்டம் செய்வோர்) செலுத்திய வரி
தறிக் உறை: தறி நெய்யும் நெசவாளர் செலுத்திய வரி
தரகுப்பட்டம்: தரகர்க்கு விதிக்கப்பட்ட வரி
ஆட்டுக்கறை: ஆடு வளர்ப்பவர் செலுத்த வேண்டிய வரி
நல்லெருது: எருது, பசு வளர்ப்போர் செலுத்த வேண்டிய வரி
ஓடக் கூலி: ஓடம் செலுத்துவோர் கட்டிய வரி
ஈழம் பூட்சி: கள் இறக்குவோர் செலுத்திய வரி
- கே.கே. பிள்ளை எழுதிய "தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்", பக். 314, 315 வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113.
வெட்கங்கெட்ட ராசராசன்கள்
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராசராசனுக்கு, அக்கோயிலுக்கு உள்ளே சிலை வைக்க - அன்றும் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் முயன்றபோது, அதற்கு மத்திய தொல் பொருள் துறை அனுமதியளிக்க மறுத்துவிட்டது. இதனால் கோயிலுக்கு வெளியே அச்சிலையை முதல்வர் நிறுவினார். இப்பெருங்கோயிலைக் கட்டிய ராசராசன், பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டவன். ஆனால், பிறப்பின் அடிப்படையில் அவன் சூத்திரன் என்பதால், அக்கோயிலின் கருவறைக்குள் நுழைவதற்கு அவனுக்கு அனுமதியில்லை.
அரசப்பெருமிதங்களில் கரையும் இன்றைய ராசராச சோழன்களுக்கும் அதுதான் நிலை! ஆனால், இதுகுறித்து ராசராசனும் வெட்கப்படவில்லை; ஆயிரமாண்டுகள் கடந்தும் பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்கள் சூத்திரர்களாகக் கருதப்பட்டு, கோயில் கருவறைக்குள் நுழைய முடியாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வராமல், கோயில் கட்டடப் பெருமிதங்களில் திளைக்கும் தமிழ்ச் சமூகமும் வெட்கப்படவில்லை.

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு!

Jallikattu is an historical identity of bravery of Tamilians - Tamil Literature Ilakkiyam Papers
இயற்கை இன்னல்கள் பலவற்றையும் தாங்கிக் கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழவனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கு பறை சாற்றும் மகத்தான திருநாள் தை பொங்கல் தினம் ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.
ஒவ்வொரு விவசாயக் குடிமகனும் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், மஞ்சள், கரும்பு போன்றவற்றுடன் சர்க்கரை பொங்கல் படையல் வைத்து, மாவிலை தோரணம் கட்டி இயற்கையையும், சூரியனையும் வழிபடும் தமிழர் திருநாள் தை பொங்கல். தை பொங்கல் விழா தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தமிழரின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் முரட்டுக் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகள் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்முத்திரையில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
காளைகளை அடக்கும் திருவிழா ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற அயல்நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அது கூர்மையான வாளைக் கொண்டு காளையை காயப்படுத்தி அடக்கும் விளையாட்டுகளாகும். ஆனால் தமிழகத்தில் கொம்புகள் கூர்சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு தனித்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல, தமிழரின் வீரத்திற்கும், வீரத்துடன் ஒன்றிணைந்த பண்பாட்டிற்கும் சான்றாகத் திகழ்கிறது.
4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீக காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இந்த முத்திரை 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 2000ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது.
மேலும் தமிழ் எழுத்தாளரும், சிந்து சமவெளி காலத்திய எழுத்துகளில் வல்லுனருமான ஐராவதம் மகாதேவனும் இதுபற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதை கடந்த 1977ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டது. இந்த முத்திரை கி.மு. 2000-ம் ஆண்டை சேர்ந்தது. இதை பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிந்து சமவெளி நாகரீக காலத்தில் நடைமுறையில் இருந்த ஜல்லிக்கட்டை இந்த முத்திரை பிரதிபலிப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதில் உள்ள படத்தை வைத்து இருவிதமான கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒருசாரார் ஒரு காளை ஒன்றுக்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்களை தூக்கி வீசுவதாக கூறுகிறார்கள். 2 வீரர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும், ஒரு வீரர் காளையை பிடிக்க முயல்வது போலவும், மற்றொருவர் பல்டி அடிப்பது போலவும், 5-வது நபர் தரையில் விழுந்து கிடப்பது போலவும் இந்த சித்திரம் அமைந்திருப்பதாக கூறுகிறார்கள்.
தமிழர் இலக்கியத்தில் "கொல்லேறு தழுவல்" என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது.
இன்றளவும் இப்படிப்பட்ட முறையில்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொல்லேறு தழுவல் நிகழ்த்தப்படுகிறது. ஜல்லிக்கட்டில் இறக்கப்படும் காளைகளை அதற்கென்றே வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்க்களுக்கும், அவர்களை தூக்கியெறிய முற்படும் காளைக்கும் இடையிலான சம வாய்ப்புடைய வீர சோதனைதான்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் ஒரு முறை இறங்கிய காளையர் எவரும் அடுத்த ஆண்டும் இறங்கி தங்கள் திறனை தொடர்ந்து நிரூபிக்காமல் இருப்பதில்லை. உடல் பலம் உள்ளவரை ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு, தங்கள் உயிரை பணயமாக வைத்து தமிழரின் வீர மரபை தொடர்ந்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடக்கும் பல ஊர்களில் ஒரு காலத்தில் தீவிரமாக காளை அடக்குவதில் போட்டி போட்டவர்கள், இன்று வயது முதிர்ந்த நிலையிலும் கூட, ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் பட்டிக்குச் சென்று, சீரிக் கொண்டு பாய்ந்துவரும் காளை ஒன்றை தொட்டுவிட்டு வீடு திரும்பும் வழக்கம் இன்றும் உள்ளது.
ஜல்லிக்கட்டு! தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றட்டும்.

தொடரும் மொழிப்போர்...

Strive to Save Tamil - Tamil Literature Ilakkiyam Papers
ஓரினம் தனது அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பல வழிகளிலும் போராடத்தான் வேண்டியிருக்கிறது. நாடு, எல்லை என தனக்கான தன்னாட்சி உரிமையைப் பெறுவதற்கும், அதனை தொடர்ச்சியாகத் தக்க வைப்பதற்குமான கலகங்களும், சச்சரவுகளும் உலகெங்கும் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன. இதில், அவ்வின மொழியின் இருப்பும், முதன்மை பெறுகிறது. "ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அது பேசுகின்ற மொழியை முதலில் அழித்துவிடு" எனும் வல்லாதிக்க சித்தாந்தத்தை எதிர்கொண்ட மொழிகளுள், தனிச்சிறப்பிற்குரிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது தமிழ்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழியின் மீது நடத்தப்படுகின்ற, அழித்தொழிப்புப் பணியில் தற்போது வரை தப்பிப் பிழைத்திருக்கிறது என்றால், அது தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அணியப்படுத்திக் கொண்ட கழக இலக்கியங்களும், காப்பியங்களுமே முதன்மைக் காரணமாகும். எத்தனையோ வடிவங்களில் நடைபெற்ற, எவ்வளவோ அழிவுச் செயல்பாடுகளுக்கு இடையிலும் தமிழ் மொழியின் தலைநிமிர்ந்த நன்னடை, பெருமைக்குரியதாக இருக்கிறது. ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இன்று கணினியில் மாபெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கும் தமிழ்மொழியின் வரலாற்று வழித்தடம், அண்மைக் காலம் வரை கரடுமுரடாய்த்தான் இருந்திருக்கிறது. இப்போதும் அது போன்ற தடத்திலேதான் பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.
சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ்ச்சமூகம், பரந்து பட்ட அளவில் கல்வியறிவு பெற்றிருந்ததை, மதுரைக்கு அருகிலுள்ள ஆண்டிப்பட்டி புள்ளிமான் கோம்பையில் கிடைத்த நடுகற்கள் சான்றாய் நின்று பகர்கின்றன. கோவையில் கிடைத்த சூலூர் மண் தட்டில் காணப்படும் குறியீடுகளும், சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகளும் ஒத்ததாய் அமைந்திருப்பது, தமிழ்ப்பண்பாட்டின் நாகரிகம் எவ்வளவு பழமை வாய்ந்தது என்பதை உரக்கத் தெரிவித்துள்ளது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு மேலும் பல வரலாற்றுத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளது. "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று அறிவுச் செருக்கோடு உலகத்திற்கே வாழ்வியல் எதார்த்தத்தை வழங்கிய தமிழ் மொழி, இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது. இதற்கிடையே, நேற்றுப் பிறந்த மொழிகளோடும், அதற்கு முந்தைய நாள் பிறந்த மொழிகளோடும் ஒப்பிட்டு, தமிழின் செம்மொழிப் பெருமையைக் கீழிறக்கும் செயல்களும் நம் கண் முன்னே அரங்கேற்றப்படுகிறது என்பதையும் நாம் கணக்கிலே கொண்டாக வேண்டும்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போர் குறித்து இப்போதுள்ள இளந்தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. கல்லூரி மாணாக்கர்கள், போர்க்குணத்துடன் தாங்கள் எண்ணிய இலக்கு ஈடேறுவதற்காக, மண்டை உடைந்து, கை கால் ஒடிந்து, குருதி சொட்ட, உயிர் ஈகம் செய்த வரலாறு, தமிழகத்தின் கருஞ்சிவப்புப் பக்கங்களாகும். 1965ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராய் இருந்த காங்கிரஸ் கட்சியின் பக்தவச்சலம், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தன்னெழுச்சியாய் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, அதில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கதறக் கதற லத்தியால் அடித்த அடியை எவராலும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. அன்று அடி வாங்கிய பெரும்பாலான மாணவர்கள் இன்று திராவிடக் கட்சிகளின் பல்வேறு பொறுப்புகளிலும், பல தமிழ்த் தேசிய அமைப்புகளிலும் வாழும் சான்றாக தற்போதும் உயிருடன் இருக்கிறார்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா தலைமையில் இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திராவிட முன்னேற்றக் கழகம், அப்போது மொழியுணர்வோடும், இனவுணர்வோடும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நாடு விடுதலையடைவதற்கு முன்பாக அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த இராஜகோபாலாச்சாரியார், 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் முதன் முதலாக இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ மற்றுமுள்ள தமிழறிஞர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். தொண்டர்களும், தலைவர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் இப்போராட்டத்தில் திரண்டனர். இதற்கிடையே முதலமைச்சரின் வீட்டிற்கு முன்பாக உண்ணாநோன்பிருந்த பல்லடம் பொன்னுசாமி என்பார் இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் முதல் நபராகக் கைதானார். அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் இந்தி மொழி எதிர்ப்பிற்காக நடராசன் கைது செய்யப்பட்டார். சிறையில் கடும் தாக்குதலுக்கு ஆளான நடராசன், 1939ஆம் ஆண்டு சனவரி 15ஆம் நாள் இறந்துபோனார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் ஈகம் செய்த முதல் போராளி இவர். தர்மாம்பாள், நாராயணி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்ட பெருமளவிலான பெண்களும் இப்போராட்டத்தின் விளைவாக கைது நடவடிக்கைக்கு ஆளாயினர்.
இந்தித் திணிப்பிற்கு ஆதரவான அரசின் முயற்சிகளுக்கு 1938ஆம் ஆண்டு இராஜாஜி வித்திட்டாரென்றால், அதற்கு எதிரான போராட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. இந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் இறந்துபோன நடராசனின் இறப்பை இராஜாஜி, பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்தார். இரண்டாவது மொழிப் போராட்டமாய்க் கருதப்படும் 1948ஆம் ஆண்டிலும் அதே காங்கிரஸ் அரசு, முதல்வராய் அமர்ந்த ஓமந்தூர் இராமசாமி மூலம் இந்தித் திணிப்பை மேற்கொண்டது. அப்போதும் பெரியார் தலைமையில் அறிஞர் அண்ணா, திரு.வி.க., பாரதிதாசன், தருமாம்பாள் என பல்வேறு தலைவர்களும், அறிஞர்களும் போராட்டங்கள் பல நடத்தி சிறை புகுந்தனர்.
வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து நாடு விடுதலை பெற்ற பின்னர், இந்தியா தனக்கென்று அரசியல் அமைப்பை உருவாக்க முடிவு செய்தது. இதற்கென்று உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக் குழு இந்தியாவின் ஆட்சி மொழி குறித்த கலந்துரையாடலை 1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தியது. அரசியலமைப்பு அவையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், தனியே நடத்திய கூட்டத்தில் ஆட்சி மொழி வாக்கெடுப்பை நடத்தினர். இதில் இந்திக்கு ஆதரவாக 77 வாக்குகளும், ஆங்கிலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும் கிடைத்தன. அப்போது அந்தக் கூட்டத்தின் தலைவராக இருந்த பட்டாபி சீதாராமய்யர் தனது ஓட்டை இந்திக்கு ஆதரவாகப் பதிவு செய்ததால் ஒரு வாக்கு வேறுபாட்டில் இந்தி மொழி வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு இந்தி மொழியை, அதனைப் பேசாத பிற மாநிலங்களில் திணிப்பதற்கு காங்கிரஸ் பெரும் முயற்சி எடுத்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் விரும்பாத நிலையில் இந்தித் திணிப்பு விரைவுபடுத்தப்பட்டது. 1950 சனவரி 26ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு சட்டம் 17ஆவது பிரிவின் கீழ் இந்தி, நடுவணரசின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான போரில் முளைத்த திராவிட முன்னேற்றக் கழகம், தொடர்ந்து பல்வேறு பேராட்டங்களை நடத்தியது. அக்கட்சியின் இதழ்களிலும், வேறு பல ஏடுகளிலும் இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பு அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதன் விளைவாக 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள் மக்களவையில் பிரதமர் நேரு, "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும்" என்று உறுதியளித்தார். இதனையடுத்து தற்காலிகமாக மூன்றாவது மொழிப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால் 1963ஆம் ஆண்டிலிருந்து 1965ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நான்காவது மொழிப்போர், இரத்தம் சிந்திய போராட்டமாக அமைந்துவிட்டது. அப்போதும் காங்கிரஸ் கட்சியே இந்தித் திணிப்பை முன்னெடுத்தது. நடுவண் உள்துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி 1963ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ஆம் நாள் கொண்டு வந்த ஆட்சி மொழி குறித்த சட்ட முன்வரைவு, பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பின. இதன் விளைவாக ஒட்டு மொத்த தமிழகமே கொந்தளித்தது. அண்ணா தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் பரவின.
கல்லூரி மாணவர்கள் அனைவரும் இந்தித் திணிப்பிற்கு எதிரான பெரும் போரில் சிறிதும் தயக்கமின்றி குதித்தனர். காங்கிரஸ் தலைமையிலான பக்தவச்சலம் அரசு மிக மோசமான ஒடுக்குமுறைகளைக் கையாண்டது. தமிழகக் காவல்துறை, மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக அடித்தத் காங்கிரஸ் தொண்டர்களைத் தயார் செய்து, ஆங்காங்கே மாணவர்கள் மீது உருட்டுக் கட்டைகளால் தாக்கியது என வரலாறு காணாத அளவில் பெரும் வன்முறைக் காடாக தமிழகத்தை மாற்றிக் காட்டியது பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இந்த நெடும் போராட்டத்தில் தான் வெறும் 21 வயதே ஆன கீழப்பழுவூர் சின்னச்சாமி, திருச்சி தொடர்வண்டி நிலையத்திற்கு முன்பாக "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க!" என்று முழக்கமிட்டு, தன் உடலுக்குத் தீ வைத்துக் கொண்டு இறந்து போனார்.
மதுரையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில், திட்டமிட்டு வன்முறையைத் தூண்டிய காங்கிரஸ் அரசு, மாணவர்களை ஓட, ஓட அடித்து விரட்டியது. அதில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். 1965 சனவரி 26ஆம் நாள் சிவலிங்கம் என்ற திமுக தொண்டர், சென்னை கோடம்பாக்கத்தில் தீக்குளித்து இறந்து போனார். மொழிக்காக உயிரை ஈந்த இத்தியாகப் போராட்டத்தை பக்தவச்சலம், சட்டமன்றத்தில் மிக இழிவாகப் பேசினார். பிறகு பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் தீக்குளித்து இறத்தல் தொடர்கதையாகின. 1965ஆம் ஆண்டு ஐம்பது நாட்கள் நடைபெற்ற நான்காவது மொழிப் போராட்டத்தில், காங்கிரஸ் அரசால் நடத்தப்பட்ட வன்முறையின் காரணமாய் சற்றேறக்குறைய 500 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றனர்.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நடந்த போராட்டங்கள் அனைத்தையும் அப்போதிருந்த இளைஞர்களும், மாணவர்களுமே பெரும் எழுச்சியோடு நடத்தினர். நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து தமிழ் மொழியைக் காப்பாற்றினாலும் கூட, நடுவணரசின் மறைமுக வேலைத்திட்டமும், மாநிலக் கட்சிகளின் கையாலாகாத்தனமும் இந்தியை கொஞ்சம், கொஞ்சமாய் தமிழகத்திற்குள் தற்போது கொண்டு வந்து கொண்டிருக்கிறது. "அனைவருக்கும் கல்வி" என்பதைக் காட்டிலும் "சர்வ சிக்ச அபியான்" வெகு இயல்பாக புழங்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள நடுவண் அரசின் அனைத்துத் துறைகளும் இந்தியை மெல்ல மெல்ல புகுத்தி வருகின்றன. நடுவண் அரசின் காப்பீட்டுத் திட்டங்களும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் இந்தித் திணிப்பை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அறிஞர் அண்ணா, "மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக எப்போது அறிவிக்கப்படுகிறதோ, அப்போதுதான் இந்த மொழிப்போர் முடிவிற்கு வரும்" என்றார். அந்த நிலை அய்யாவால் சாத்தியமாகுமா..? அல்லது அம்மாவால் சாத்தியமாகுமா..? என்பது இன்னமும் விளங்காத புதிர்.
மொழிப் போராட்டத்தை கையிலெடுத்து, ஆளும் உரிமையைப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் மொழி, இன உணர்வைக் காப்பாற்ற தன்மரியாதையோடு செயல்படத் தொடங்கும் நாள் எந்நாளோ? இரு கழகங்களின் ஆட்சியில் தான் ஆங்கில வழியிலான நர்சரிப் பள்ளிகள் வெகு வேகமாக வளர்ந்தன. தமிழ் உரையாடல்கள் அவ்வப்போது தலைகாட்டும் வண்ணம் தமிழ்த் திரைப்படங்களின் வளர்ச்சி விரைவடைந்ததும் கழகங்களின் காலத்தில்தான். தற்போது கிரந்த எழுத்துக்களைக் கொண்டு தமிழ்மொழியின் கணினிப் பயன்பாட்டு வளர்ச்சியைத் தடை செய்கின்ற முயற்சியும் திமுகவின் காலத்தில்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு தலைமுறையே தமிழ் மொழியை உச்சரிக்கும் திறனற்று, ஆங்கில மோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் மனநிலையை ஊக்குவித்தது திமுகவும் அதன் அரசியல் எதிரியான அதிமுகவும்தான்.
தமிழ்வழியில் பயின்றோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற திமுக அரசின் அறிவிப்பிற்கு நீதிமன்றம் சென்று தடையாணை பெறுகின்ற அளவிற்கு தமிழ் மொழிக்கெதிரான செயல்பாடுகள் அப்பட்டமாகவே தமிழகத்தில் நடைபெறுகின்றன. இதற்கெல்லாம் தமிழகத்தை ஆளுகின்ற, ஆளப்போகின்ற கழக அரசுகள் என்ன சொல்லப் போகின்றன? அண்டை மாநிலங்களான மராட்டியமும், கன்னடமும், மலையாளமும் தனது தாய்மொழியின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் பங்காற்றுகின்ற போது, தமிழகத்தால் மட்டும் இயலாமற்போனது ஏன்? மொழி வழி தேசியம் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டு, அண்டைத் தேசிய இனங்கள், அதனதன் மாநிலத்திற்குள் ஒன்று சேரும்போது தமிழகத்தில் மட்டும் அவ்வாறு இயலவில்லையே என்ன காரணம்? முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி போன்ற உயிராதாரச் சிக்கல்களில் கூட தமிழர்களால் ஒன்று பட இயலாமற் போனதற்கு யாரைக் குற்றம் சாட்டுவது? இவையனைத்திற்கும் காரணம் தன்னல அரசியலன்றி வேறு எது?
முதல் பத்து இடத்தில் தமிழ்மொழி!
உலகின் மிகப் பிரபலமான அகரமுதலிகளுள் முதன்மை இடத்தை வகிக்கும் விக்கி அகரமுதலி தனது அடையாள முத்திரையில் தமிழையும் இடம் பெறச் செய்துள்ளது. தற்போது விக்கி அகரமுதலியில் (http://www.wiktionary.org/) மட்டும் ஒரு இலட்சத்து 92 ஆயிரம் சொற்கள் இடம்பெற்று முதல் பத்து இடங்களுக்குள் தமிழ் இடம் பெற்றுள்ளது (http://meta.wikimedia.org/wiki/Wiktionary#Statistics). இந்திய மொழிகளுள் எவையும் இந்த இடத்தைப் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் பேச உறுதியேற்போம்!
இன்று கணினியில் தமிழ் கோலோச்சுவதற்கு புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களும், ஈழத் தமிழர்களுமே மிக முக்கியக் காரணம். மொழிப் போராடத்தை தீவிரமாக நடத்திக் காட்டிய தமிழ் மண்ணில் பிறந்தோர் தற்போது ஒரு சொற்றொடரைக் கூட முழுமையாகத் தமிழில் பேச இயலவில்லை. இதற்கெல்லாம் காரணம் நம்மை ஆளுகின்ற அரசுகளின் பலவீனமே! இந்தி மொழிப்போர் ஈகியர் நாளிலாவது நாம் அனைவரும் தாய்மொழியில் உரையாட உறுதியேற்போம்.

பழந்தமிழனின் வழிபாட்டு முறை

Tamil Literature Ilakkiyam Papers
ஆதித் தமிழனின் வழிபாட்டு முறையானது இறந்து போன வீரர்களின் நினைவாக கல்நட்டு, அவனுக்குப் பிடித்த உணவு வகைகளை படையலிட்டு, பலியிட்டு வணங்குவதாகும். இறந்து போன மனிதனின் உடலோடு அவன் பயன்படுத்திய ஆயுதம் மற்றும் பொருட்கள், அந்த குலத்தின் சின்னம் ஆகியவற்றையும் சேர்த்து புதைத்து தனது முன்னோரை தமிழன் வழிபட்டு வந்தான்.
இறந்தவர்களின் நினைவும், அது சார்ந்த நம்பிக்கையும் தங்களுக்கு ஆற்றலை வழங்கும் என்ற கருத்தியலின் அடிப்படையிலேயே நடுக்கல் வழிபாடென்பது அமைந்தது. நடுக்கல்லுக்கு பூக்களைச் சூடி மயில் தோகையை அணிவித்து வழிபாடு செய்ததை அகநானூறும் கரையை அழிப்பது போல் பீறிட்டு வரும் வெள்ளத்தை அணை தடுத்து நிறுத்தியது போல் பாய்ந்து வரும் பகைவர் படையை தடுத்து நிறுத்திய வீரர்களுக்கு நடப்பட்ட நடுக்கற்களைப் பற்றி புறநானூறும்பேசுகின்றன.
இறந்தவர்களின் நினைவாக நடப்பட்ட நடுக்கல் வழிபாட்டில் ஆடு, கோழி வெட்டப்படுவதும், கள் படைக்கப்பட்டதும் முக்கிய இடம் பிடித்தது.
இல்லடு கள்ளின் சில் குடிச் சிறூர்ப்
புடை நடு கல்லின் நாட்பலி யூட்டி (புறம்:329)
நடுகற் பீலி சூட்டி நார் அரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ (புறம்:232)
நடுகள் பீலி சூட்டி துடுப்படுத்துத்
தோப்பி கள்ளொடு துரூ உப்பலி கொடுக்கும் (அகம்:35)
இறந்தவனின் நினைவிடத்தில் அவன் விரும்பி உண்ட மதுவும், பலி கொடுக்கப்பட்ட ஆடும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட செய்தியை மேற்கண்ட சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.
நடுக்கல்லை வழிபட்டுக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு சிறு பகுதியினர் சமுதாய வளர்ச்சியையொட்டி புதிய மாற்றத்தை நோக்கி சென்றனர். குழுவாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் அடுத்தக் கட்டத்தை அடைந்தனர். அரசு என்ற நிறுவனம் தோன்றியது; உடமை வர்க்கம் சான்றோர்களையும், உயர்ந்தோர்களையும் உருவாக்கியது; உழைப்போடு நேரடியாக தொடர்பில்லாத இந்த முலாம் பூசிய கூட்டமே ஆதிக்கத்தை தங்கள் கையில் வைத்திருந்தது. இனக்குழு காலத்திலிருந்த பொதுவான நிலைமை மாறி, உயர்ந்தோர், தாழ்ந்தோர், மேலோர், கீழோர் என்ற இரண்டு கருத்துக்களும் அதனையொட்டி இரண்டு வகையான சமூக வாழ்வும், பழக்க வழக்கங்களும், கடவுள்களும் உருவாயின.
அரசுகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளவும் தொடர்ந்து யுத்தங்களை நடத்திக் கொண்டே இருந்தன. யுத்தங்களில் மனிதர்கள் முன்பு போலவே செத்து மடிந்தனர். ஆனால் இப்பொழுது செத்துப் போன சான்றோர்களுக்கு மேல் உலகமும், வீர சொர்க்கமும் உருவாக்கப்பட்டது. ஆனால் கீழோர்களுக்கு வழக்கம் போல் ஊர் எல்லைகளில், காட்டுப் பாதைகளில் நடுக்கற்கள் நிறுத்தப்பட்டன. அவைகளையே தங்களின் தெய்வங்களாகவும் கருதினர்.
உடமை வர்க்கம் இறந்து போன சான்றோர்களுக்காக மேலே ஒரு உலகத்தை கட்டி அமைத்து, அவர்களுக்காக வேள்விகள் நடத்தி, எரியும் அக்னியின் வழியே மேல் உலகில் இருப்பவர்களுக்கான படையலை அனுப்பியது. ஆனால் உடமைகள் அற்றக் கூட்டம் இறந்து போன தங்களின் முன்னோர்களுக்கு தாங்கள் உண்ணும் உணவை படையலிட்டு, ஆடு, கோழி வெட்டி பலியிட்டு அவர்கள் நினைவாக தாங்களே அதை உட் கொண்டு புதிய நம்பிக்கையுடன் வாழ்வை தொடர்ந்தனர்.
இன்று எண்ணிலடங்கா கிராம தெய்வங்களான அய்யனார், மாடன், காடன், மாயன், சுடலை, விருமன், கருப்பு, முனி பேச்சி, ஒச்சு, காத்தாயி, வீராயி என அனைவரும் மேல் உலகத்திற்கும், வீர சொர்க்கத்திற்கும் சான்றோர்களால் அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப் பட்டவர்களே. வைதீக கருத்தியலின் அடிப்படையில் புறக் கணிக்கப்பட்ட ஒடுக்கு முறையின் வடிவங்களே.
ஒடுக்குமுறை என்பதும், சுரண்டல் என்பதும் பொருளியல் தளத்தில் மட்டும் தனித்து நடப்பதல்ல. சமூக வாழ்வின் மேல் கட்டுமானமான சாதி, சமயம், சட்டம், இலக்கியமென அனைத்திலும் அது நடக்கிறது. இந்திய சமய மரபில் நிகழ்த்தப்பட்ட ஒடுக்கு முறையின் ஒரு முக்கிய பகுதி கீழோர்களின் தெய்வகள் மீதும், அவர்களின் வழிபாட்டு முறைகளின் மீதுமான தாக்குதலாகும்.

தமிழ் தமிழர்களின் தாய்மொழி 

தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி துபாய் மலேசியா தென்னாபிரிக்கா மொரீசியஸ் பிஜி ரீயுனியன் டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 7 கோடி 70 இலட்சம் (77 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு ஒரு மொழியை தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில் தமிழ்இ பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழிஇ தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளீல் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாகஇ பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது.


வரலாறு

தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன்இ 2003).ஜ4ஸ இந்தியாவில் கி்டைத்துள்ள ஏறத்தாழ 100இ000 கல்வெட்டுஇ தொல்லெழுத்துப் பதிவுகாலில் 55இ000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால்இ மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள்இ மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும்இ கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள்இ தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.ஜ5ஸ பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம்இ கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.



தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:

சங்க காலம் (கிமு 300 - கிபி 300)
சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
மத்திய காலம் (கிபி 1200 - கிபி 1800)
இக்காலம் (கிபி 1800 - இன்று வரை)


பக்தி இலக்கிய காலத்திலும்இ மத்திய காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர்இ மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும்இ மேடைப் பேச்சுகளிலும்இ அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில்இ மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.
மொழிக்குடும்பம்


தமிழ் தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில்இ இருளாஇ முயமையனiஇ பேட்டா குறும்பாஇ ளூழடயபய மற்றும் லுநசரமரடய என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம்இ தமிழ்-மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும். தமிழ்-மலையாளம் மொழிகள்இ தமிழ்-குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும்இ தமிழ்-குடகு மொழிக் குடும்பம்இ தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பம்இ திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.
தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ளஇ கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம்இ சொற்கள்இ வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழும்இ மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம் மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர். மலையாளத்துக்கும்இ தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சிலஇ வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும்இ மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும்இ தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.சொற்பிறப்பு
தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும்இ தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவை தவிர இச் சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முக்கியமானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிளஇ தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள்இ மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாகஇ "தமிழ் - தமிள - த்ரமிள - த்ரமிட - த்ரவிட ஆகியது என்பர்.

சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார்.ஜ6ஸ காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாகஇ வயஅணை ஈ வயஅ-ணை ஈ ழூவயஎ-ணை ஈ ழூவயம-ணை என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும்இ அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.ஜ


தமிழ் பேசப்படும் இடங்கள்

தமிழ்இ தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும்இ இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும்இ குறிப்பாகஇ இந்திய மாநிலங்களான கர்நாடகம்இ கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும்இ இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.

தமிழ் மக்கள்இ 19 ஆம் நூற்றாண்டிலும்இ 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும்இ ஒப்பந்தக் கூலிகளாகவும்இ கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும்இ இந்தியாஇ இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர்இ மலேசியாஇ மொரீசியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். தென்னாப்பிரிக்காஇ குயானாஇ பிஜிஇ சுரினாம் மற்றும் ட்ரினிடாட்டும் டொபாகோவும் போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும்இ அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.

மிக அண்மைக்காலங்களில்இ பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும்இ ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாகஇ பல தமிழர்கள் ஆஸ்திரேலியாஇ கனடாஇ ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும்இ இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும்இ ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.
ஆட்சி மொழி அங்கீகாரம்

தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள்இ பாண்டிச்சேரி ஆகிய ஒன்றியப் பகுதிகளிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு முகமை மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 525 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.
இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம்
இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும்இ அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து ஜ8ஸ இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போதுஇ 2004 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது
பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்

தமிழ்இ அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலதிகமாகஇ இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும்இ கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (னபைடழளளயை) காணப்படுகின்றது. இங்கே கொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதைஇ கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ்இ சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறுஇ செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால்இ எழுத்துத் தமிழ்இ தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும்இ ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.


தமிழ்
செந்தமிழ்
கொடுந்தமிழ்
முத்தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
இயற்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
ஆட்சித் தமிழ்
சட்டத் தமிழ்
அறிவியல் தமிழ்
மருத்துவத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழ் வட்டார மொழி வழக்குகள்
கொங்குத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
மலேசியத் தமிழ்
முஸ்லிம்கள் தமிழ்
சென்னைத் தமிழ்
திருநெல்வேலித் தமிழ்
தஞ்சாவூர்த் தமிழ்
மதுரைத் தமிழ்
ஈழத் தமிழ்
தமிங்கிலம்
மணிப்பிரவாளம்
மலையாளம்
தொகு

தற்காலத்தில்இ எழுதுவதற்கும்இ மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாகஇ செந்தமிழ்இ பாட நூல்களுக்குரிய மொழியாகவும்இ பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும்இ மேடைப் பேச்சுகளுக்கும்இ விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில்இ மரபு வழியில்இ செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள்இ மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சிஇ வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும்இ மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.

செந்தமிழுக்கான இலக்கண விதிகள் இறைவனால் உருவாக்கப் பட்டதாக நம்பப்படுவதால்இ செந்தமிழே சரியான மொழியாகக் கருதப்பட்டது. இதனால்இ பேச்சுத் தமிழ் வழக்குகளுக்குச் சிறப்புக் கிடைக்கவில்லை. (எடுத்துக்காட்டுஇ காங்கேயர் (முயமெநலயச)இ 1840). பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாகஇ தமிழில்இ அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும்இ ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடுஇ அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ்இ 'படித்தஇ பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது (ளுஉhகைகஅயnஇ 1998). எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்குஇ தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில்இ அதிக மக்கள் தொகையைக் கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர்.
வட்டார மொழி வழக்குகள்
முதன்மைக் கட்டுரை: தமிழ் வட்டார மொழி வழக்குகள்

தமிழில் வட்டாரமொழி வழக்குகள்இ பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. மற்றும் பல வேறு பழைய செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். எடுத்துக்காட்டாகஇ "இங்கே" என்ற சொல்இ தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும்இ யாழ்ப்பாணம் (இலங்கை) பகுதிகளில் "இங்கை" என்றும் வழங்கப்படுகின்றது. ஆயினும் திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும்இ இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு"ஃ"இங்கிட்டு" என்றும் வழங்கும் சொற்கள் "இங்கே" என்ற சொல்லில் கிளைத்தவை அல்லாமல் வேறு செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். இங்கனெ என்பது "இங்கணே" அல்லது "இங்கனே" என்பதன் மாற்றமும் "இங்குட்டு"ஃ"இங்கிட்டு" என்பது "இங்கட்டு" என்னும் செம்மொழிச்சொல்லின் மாற்றமும் ஆகும். "கண்" என்னும் சொல்லின் பொருள் இடம் ஆகும். சான்றாகச் சென்னைத் தமிழகராதி: "Pடயஉநஇ ளவைந் இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள்இ 1058)". கட்டு என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும். கொங்குநாட்டார் இன்றும் "அக்கட்டாலே போய் உட்கார்" என்று சொல்வதைக் கேட்கலாம். "இங்கன்" அல்லது "ஈங்கன்" என்பதும் பழைய இலக்கியங்களில் காண்பவை (சென்னைப்பல்கலைக் கழகத் தமிழகராதி காண்க). இது ஒரே சொல்லே பலவாறு சிதைந்ததாகக் கருதும் கோட்பாட்டைத் திருத்த உதவும்; மேலும் வட்டாரவழக்குகள் பழைய இலக்கியச்சொற்கள் உண்மையிலேயே பேச்சில் வழங்கியதற்கு நல்ல சான்றாகவும் இருப்பதைக் காட்டும்.

பெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும்இ சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் பல சொற்கள்இதமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை. "பாலக்காடு ஐயர்" தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் கானப்படும். இறுதியாகஇ ஹெப்பர் மற்றும் மாண்டையம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் தமிழர்களால் பேசப்படும் தமிழில் வைணவ பரிபாஷையின் எச்சம் காணப்படுகிறது. வைணவ பரிபாஷை என்பது ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் உருவான வைணவ சமய மரபுகள் மற்றும் பண்புகளை உள்ளடக்கிய மொழி வழக்காகும்.

தமிழ் மொழி வழக்குகள் வட்டார அடிப்படையில் மட்டுமல்லாது சாதி அடிப்படையிலும் வேறுபடும். பல சாதிகளுக்கென தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன. தற்போது சாதி மறுப்பு இயக்கங்களின் விளைவாக இவ்வேறுபாடுகள் மறைந்து வந்தாலும்இ ஒருவரின் பேச்சு வழக்கை வைத்து அவரின் சாதியை சில சமயங்களில் கணிக்க முடிகிறது.

எத்னொலோக் நுவாழெடழபரந என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவணம்இ தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கிறது. அவையாவன ஆதி திராவிடர்இ ஐயர்இ ஐயங்கார்இ அரவாஇ பருகண்டிஇ கசுவாஇ கொங்கர்இ கொரவாஇ கொர்சிஇ மதராஸிஇ பரிகலாஇ பாட்டு பாஷைஇ இலங்கை தமிழ்இ மலேயா தமிழ்இ பர்மா தமிழ்இ தெனாப்பிரிக்கா தமிழ்இ திகாலுஇ அரிஜன்இ சங்கேதிஇ கெப்பார்இ மதுரைஇ திருநெல்வேலி. கொங்கு மற்றும் குமரி ஆவன வேறிரு தெரிந்த வட்டார வழக்குகள்.

புவியியல் தொடர்பான வட்டார வழக்குகள் ஒருபுறமிருக்கஇ சமுதாய அடைப்படையிலும் பல்வேறு மட்டங்களில் தமிழ் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடுகளை கவனிக்கலாம். புதிய வழக்காகஇ தொலைக் காட்சி முதலான தொடர்புச் சாதனங்களும் இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த தமிழைத் தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம்இ கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன. முக்கியமாகஇ இலக்கியம் மற்றும் அது போன்ற பண்பாட்டு மற்றும் மரபுவழிப் பயன்பாடுகளுக்கு அப்பால்இ கல்விஇ அறிவியல்இ நிர்வாகம் மற்றும் இன்னோரன்ன நவீன துறைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாடுஇ இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள்இ ஒரு பகுதியினர் பயன்படுத்தும் தமிழை இன்னொரு பகுதித் தமிழர் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு வேறுபாடுள்ள மொழி வழக்குகள் உருவாகக் காரணமாக உள்ளன.
எழுத்துமுறை

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம்இ அளபெடைஇ மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும்இ கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.

வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பின்னர்இ வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.


கிரந்த எழுத்துக்கள்

கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், விசேடமாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்திய பொழுது கிரந்த எழுத்துக்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இன்று, மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துக்கள் வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

ஜ ja, ஜா jaa, ஜி ji, ஜீ jii, ஜு ju, ஜூ juu, ஜெ je, ஜே jae, ஜை jai, ஜொ jo, ஜோ joa, ஜௌ jow, ஜ் j

ஷ sha, ஷா shaa, ஷி shi, ஷீ shii, ஷு shu, ஷூ shuu, ஷெ she, ஷே shae, ஷை shai, ஷொ sho, ஷோ shoa, ஷௌ show/shou, ஷ் sh

ஸ Sa, ஸா Saa, ஸி Si, ஸீ Sii, ஸு Su, ஸூ Suu, ஸெ Se, ஸே Sae, ஸை Sai, ஸொ So, ஸோ Soa, ஸௌ Sow, ஸ் S

ஹ ha, ஹா haa, ஹி hi, ஹீ hii, ஹு hu, ஹூ huu, ஹெ he, ஹே hae, ஹை hai, ஹொ ho, ஹோ hoa, ஹௌ how, ஹ் h

க்ஷ ksha, க்ஷா kshaa, க்ஷி kshi, க்ஷீ kshii, க்ஷு kshu, க்ஷூ kshuu, க்ஷெ kshe, க்ஷே kshae, க்ஷை kshai, க்ஷொ ksho, க்ஷோ kshoa, க்ஷௌ kshow, க்ஷ் ksh